மண்ணைக் கவ்வினாலும் பரவாயில்லை.. டெல்லி தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது- ஆம் ஆத்மி அதிரடி!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்காது என அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி இடையே கூட்டணி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு கடைசி நேரத்தில் தோல்வியில் முடிவடைந்தது. ஹரியானாவில் காங்கிரஸ் கணிசமான இடங்களைப் பெற்றாலும் ஆம் ஆத்மி மிக மிக மோசமான தோல்வியைத் தழுவிய நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் டெல்லி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதிலும் ஆம் ஆத்மி முனைப்பாக உள்ளது.

டெல்லியைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மி , பாஜக இடையேதான் போட்டி. டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸும் வாக்கு வங்கியை வைத்திருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி தமது வாக்கு வங்கியை டெல்லியில் இழந்து நிற்கிறது.
இந்த நிலையில் ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கூட்டணிப் பேச்சுகளை நடத்தின. ஆனால் ஆம் ஆத்மியை அவமதிக்கும் வகையில் ஹரியானா காங்கிரஸ் நடந்து கொண்டதால் தனித்தேப் போட்டியிட்டது.
தற்போது டெல்லி தேர்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்கிறது ஆம் ஆத்மி. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கார் கூறியதாவது: ஹரியானாவில் காங்கிரஸ் அதீத நம்பிக்கையுடன் இருந்தது. ஆம் ஆத்மி கட்சியையும் குறைவாக மதிப்பிட்டது. ஹரியானாவில் சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றை கூட்டணியில் இணைக்க மறுத்தது காங்கிரஸ். லோக்சபா தேர்தலிலும் ஆம் ஆத்மியின் பலத்தை குறைவாக நினைத்தது காங்கிரஸ். ஆகையால் டெல்லி தேர்தலில் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்கவே அமைக்காது என்றார்.
லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்திருந்தன. டெல்லி, ஹரியானாவில் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிட்டன. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. ஆனாலும் டெல்லியில் அனைத்து லோக்சபா தொகுதிகளையும் பாஜகதான் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்டக்கது.












Click it and Unblock the Notifications