அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே?
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்கரோச் ஜனதா கட்சி' (CJP) சார்பாக இன்று பிரம்மாண்டப் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு சிஜேபி இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே, அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்திறங்கி நேரடியாகப் போராட்டக் களத்தில் இணைந்துள்ளார்.
இதேவேளையில் மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்) நகரில் அமைந்துள்ள அபிஜீத்தின் வீட்டிற்கு திடீரெனப் போலீஸ் படை குவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அபிஜீத் திப்கே கைது செய்யப்படுவார் என்ற கேள்வி இருந்த நிலையில் தற்போது அவரது அவுரங்காபாத் வீட்டிற்கு போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது. எதற்காக?

டிசிபி கொடுத்த விளக்கம்
சத்ரபதி சம்பாஜிநகர் நகரின் வாழுஜ் எம்ஐடிசி (Waluj MIDC) தொழில்பேட்டை பகுதியில் தான் அபிஜீத் திப்கேயின் வீடு அமைந்துள்ளது. அபிஜீத் திப்கே அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதைத் தொடர்ந்து, இந்த வீட்டைச் சுற்றிலும் திடீரெனப் போலீஸ் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு உள்ளது.
இது குறித்துத் விளக்கம் கொடுத்துள்ள மண்டலம் 1-ன் காவல் துணை ஆணையர் (DCP Zone 1) பங்கஜ் அதுல்கர், "அபிஜீத் திப்கே இந்தியா வந்தடைந்துள்ள சூழலில், அவரது வீட்டின் முன்பாகத் தேவையில்லாத கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கையாக இந்த கூடுதல் பாதுகாப்புப் படை நிறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தேவைப்பட்டால், தற்போதைய சூழலை ஆய்வு செய்து கூடுதல் போலீஸார் அங்கு குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டை காலி செய்த பெற்றோர்?
காவல்துறையின் இந்த திடீர் கெடுபிடிகளுக்கு இடையே, அபிஜீத் திப்கேயின் இல்லத்தில் ஒரு மிக முக்கிய விபரம் வெளிவந்துள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள அந்த வாழுஜ் பகுதி வீட்டில் தற்போது அபிஜீத்தின் பெற்றோர்கள் யாரும் தங்கியிருக்கவில்லை என்றும், அவர்கள் தற்காலிகமாக வீட்டை காலி செய்துவிட்டுப் பாதுகாப்பான வேறொரு இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அபிஜீத்தின் பெற்றோர் தற்போது வீட்டில் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் எங்களிடம் எவ்விதமான தொடர்பிலும் இல்லை" என்று குறிப்பிட்ட டிசிபி பங்கஜ் அதுல்கர், இது தொடர்பான கூடுதல் ரகசிய விபரங்களைப் பகிர்ந்து கொள்ளப் மறுத்துவிட்டார்.
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு எதிராக லட்சக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி அபிஜீத் திப்கே அமைதிப் போராட்டம் நடத்தி வரும் அதே நேரத்தில், மகாராஷ்டிராவில் உள்ள அவரது வீட்டை நோக்கிப் போலீஸ் படை நகர்ந்திருப்பது, டெல்லி முதல் சத்ரபதி சம்பாஜிநகர் வரை பரபரப்பை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications