பிரளயத்தை ஏற்படுத்தும் 'பிரணாப் முகர்ஜியின் டைரி' புத்தகமா வெளிவருமா?மகன், மகள் இடையே காரசார மோதல்!
டெல்லி: இந்திய அரசியலில் பல்வேறு புயல்களை கிளப்ப காத்திருக்கும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் டைரி குறிப்புகளை புத்தகமாக கொண்டு வருவதில் அவரது மகன் அபிஜித் முகர்ஜி, மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி ஆகியோரிடையே பொதுவெளியில் பகிரங்க மோதல் வெடித்துள்ளது.
இந்திய அரசியலில் முதுபெரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி காலம் முதலே பிரதமர் பதவியை ஒரு கனவாகவே வைத்திருந்தார். ஆனால் காலந்தோறும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பிரணாப் டைரி
இந்த தேசத்தின் ஜனாதிபதி என்ற பெருமை கிடைத்த கையோடு அவரது அரசியல் வாழ்வும் முடிவுக்கு வந்தது. பிரணாப் முகர்ஜி தாம் மரணிப்பதற்கு முன்னர் சில நாட்கள் வரை நாள்தோறும் டைரி குறிப்புகளை எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
|
தீர்மானிப்பார் ஷர்மிஸ்தா முகர்ஜி
இந்த டைரி குறிப்பின் சில பக்கங்கள் ஏற்கனவே வெளியாகி காங்கிரஸ் கட்சிக்கும் அதன் மூத்த தலைவர்களுக்கும் பெரும் நெருக்கடியை கொடுத்திருந்தது. பிரணாப் முகர்ஜி மறைந்த போதும் இந்த டைரி குறிப்புகள் என்னவாகும் என கேள்வி எழுந்தது. ஆனால் பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி வசமே இந்த டைரி குறிப்புகள் இருந்ததால் அவரே இதனை தீர்மானிப்பார் எனவும் கூறப்பட்டது.

புத்தகமாக வெளிவருகிறது
இந்நிலையில்தான் பிரணாப் முகர்ஜியின் டைரி குறிப்புகளை ரூபா பதிப்பகத்தினர் புத்தகமாக வெளியிட உள்ளனர். இந்த புத்தகம் வரும் ஜனவரியில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஷர்மிஸ்தா முகர்ஜியின் ஏற்பாட்டில் இந்த புத்தகத்தை வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
|
மகன் அபிஜித் எதிர்ப்பு
ஆனால் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜியோ, இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பாக முழுமையாக தாம் படித்து பார்க்க வேண்டும்; அதுவரை இதனை வெளியிடக் கூடாது என ரூபா பதிப்பகத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதனையே இன்று ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த ட்வீட்டுகள் மூலமாகவும் வலியுறுத்தி இருந்தார். தந்தை உயிருடன் இருந்திருந்தாலும் இதனையே செய்திருப்பார் என்றும் அபிஜித் முகர்ஜி தமது ட்வீட்டுகளில் வலியுறுத்தி இருக்கிறார்.

ஷர்மிஸ்தா முகர்ஜி கடும் மோதல்
இதற்கு அபிஜித் முகர்ஜியின் சகோதரியான ஷர்மிஸ்தா முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தந்தையின் டைரி குறிப்புகள் புத்தகமாக வெளியிடுவதற்கு அபிஜித் முகர்ஜி முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது; தேவையற்ற பப்ளிசிட்டிக்காக இப்படி எல்லாம் செய்யக் கூடாது என கடுமையாகவே சாடியிருக்கிறார். பெரியவீட்டு பிள்ளைகள் இருவரும் பொதுவெளியில் மோதிக் கொள்வது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications