காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள்.. விசாரிக்க 5 நீதிபதிகள் அரசியலமைப்பு பெஞ்ச்
டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், இந்திய அரசியலமைப்பின், 370 வது பிரிவை ரத்து செய்வது தொடர்பான மனுக்கள் குறித்து விசாரிக்க, நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்சை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.
அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பெஞ்ச் இந்த விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, ஆகஸ்ட் மாதம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இதுதொடர்பான விசாரணையின்போது, அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து ஒரு பெரிய பெஞ்ச் இந்த விஷயத்தை விசாரிக்கத் தொடங்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதியில், யூனியன் பிரதேச உத்தரவு நடைமுறைக்கு வரும்.
இதை எதிர்த்துதான், உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அவற்றில் தேசிய மாநாடு, சஜ்ஜாத் லோன் தலைமையிலான மக்கள் மாநாடு மற்றும் பல தனிநபர்கள் மனுக்களும் அடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை முதன்முதலில் நாடிய வழக்கறிஞர் எம்.எல். ஷர்மாவின் மனுவும் அடங்கும்.