”நான் ஒரு நேத்தாவாதி” சாவர்க்கர் போராட்டம் மறக்கடிக்கப்பட்டுள்ளது.. நடிகை கங்கனா ரனாவத்!
டெல்லி: நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் நடக்கும் நேத்தாவாதி என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்துகளுக்கு பெயர்போனவர். பாலிவுட்டில் நிலவி வரும் நெப்போட்டிசத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கங்கனா ரனாவத், வலதுசாரி ஆதரவாளர் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதிரடியாக மற்றும் சர்ச்சையான கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார்.
அதிலும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராகவும், சாவர்க்கரை வழிகாட்டியாகவும் தேர்ந்தெடுத்து பயணித்து வருகிறார். இவரது அரசியல் நடவடிக்கையால் அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய தாக்கத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனைத்தொடந்து எமர்ஜென்சியை மையமாக வைத்து கங்கனா ரனாவத் இயக்கி நடித்துவரும் படம் உருவாகி வருகிறது.

நேத்தாவாதி
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற கடமை பாதை, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு விழாவில் நடிகை கங்கனா ரனாவத் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய கருத்துகள் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்து கங்கனா ரனாவத் கூறுகையில், நான் காந்தி வழியை பின்பற்றும் 'காந்தியவாதி' அல்ல. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வழியில் நடக்கும் 'நேத்தாவாதி'.

சாவர்க்கர்
நான் இப்படி பேசுவது பலருக்கு பிரச்னையை கொடுக்கலாம். நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் யோசிப்போம். எனது பார்வையில் நேதாஜியின் போராட்டம் மறுக்கப்பட்டுள்ளது. அவரது போராட்டம் மட்டுமல்ல, பல புரட்சியாளர்களின் போராட்டம் இங்கு மறுக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும் உள்ளது. அதில் ஒருவர் தான் வீர சாவர்க்கர் என்று தெரிவித்துள்ளார்.

காந்தி போராட்டம்
இந்திய சுதந்திர போராட்டம் பற்றிய ஒரு பக்கம் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு' என்று காந்தி சொன்னதை மட்டும் தான் நாம் பார்த்துள்ளோம். அது தண்டி யாத்திரை, உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவை அடங்கும்.

சுபாஷ் சந்திரபோஸ்
ஆனால் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ராணுவத்தை கட்டமைத்தவர் நேதாஜி. சுதந்திர வேட்கையோடு உலகம் முழுவதும் பயணித்தவர். ஒருபோதும் அவருக்கு அதிகார நோக்கம் இருந்தது இல்லை. நாட்டின் விடுதலை மட்டுமே அவர் கொண்டிருந்த நோக்கம் என்று தெரிவித்துள்ளார். தான் ஒரு நேத்தாவாதி என்று கங்கனா பேசியுள்ள கருத்துகளுக்கு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications