அதானி குழும மோசடி: உச்சநீதிமன்றத்தில் காங். ஜெயா தாக்கூர் திடீர் வழக்கு- பிப். 17-ல் விசாரணை
அதானி குழும மோசடிகள் குறித்து விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார்.
டெல்லி: அமெரிக்காவின் ஹிண்டர் பர்க் ஆய்வு நிறுவனத்தின் அதானி குழும மோசடிகள் தொடர்பாக விசாரணை கோரி காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாக்கூர் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயா தாக்கூரின் இந்த மனு மீது பிப்ரவரி 17-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
அதானி குழுமம் பங்கு சந்தையில் எப்படி எல்லாம் மோசடி செய்தது என்பதை அமெரிக்காவின் ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை அம்பலப்படுத்தியது. உலகம் முழுவதும் அதானி குழும விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால் அதானி குழுமம் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது. பங்கு சந்தைகளில் அதானி குழுமத்தின் மதிப்புகள் வீழ்ச்சியடைந்தன. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி கிடுகிடுவென வீழ்ச்சியை சந்தித்தார்.
அதானி குழும விவகாரம் இந்திய அரசியலிலும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. அதானி குழும மோசடிகளை முன்வைத்து நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு சபைகளுமே முடக்கப்பட்டன. அதானி குழும மோசடிகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அதானி குழும மோசடிகளின் பின்னணியில் மத்திய பாஜக அரசு உடந்தையாக இருக்கிறது என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
அத்துடன் அதானி குழும மோசடிகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த பொதுநலன் வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து மத்திய அரசுக்கும் பங்கு சந்தையை ஒழுங்குபடுத்தும் செபி அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் செபி அமைப்பும் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், அதானி குழும மோசடிகள் குறித்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்திருந்தது செபி.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜெயா தாக்கூர் திடீரென உச்சநீதிமன்றத்தில் அதானி குழும மோசடிகள் தொடர்பாக விசாரிக்க கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட், நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றது. இம்மனு மீது வரும் 17-ந் தேதி விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications