உச்சநீதிமன்ற உத்தரவால் எடப்பாடிக்கு பின்னடைவு, ஓபிஎஸ்சுக்கு வெற்றி! மனோஜ் பாண்டியன் சொல்றதை பாருங்க
டெல்லி: ‛‛அதிமுக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்பது இரட்டை இலை சின்னம் முடக்கப்படக்கூடாது என்று நினைத்த ஓ பன்னீர் செல்வத்துக்கு கிடைத்த வெற்றி. மாறாக ஜூலை 11 பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானதற்கு உச்சநீதிமன்றம் அதிகாரம் அளிக்கவில்லை'' என உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பற்றி ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் விளக்கினார்.
அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் யார் அதிகாரபூர்வமாகப் போட்டியிடுவார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில் தான் ஜூலை 11 பொதுக்குழுவின் படி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் தனக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்தார்.
வேட்பாளரை பொதுக்குழுவே முடிவு செய்யும்.. தீர்ப்பால் எடப்பாடி vs ஓபிஎஸ் யாருக்கு சாதகம்? 7 பாயிண்ட்ஸ்
தேர்தல் ஆணையம் பதில்
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் நேற்று பதில் அளித்தது. அதில் ஜூலை 11 அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இரட்டை இலைச் சின்னம் குறித்த பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாகத் தேர்தல் அதிகாரி முடிவெடுப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பொதுக்குழு கூட்ட நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் தான் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைத்தேர்தலில் பொதுவேட்பாளரை அதிமுக சார்பில் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டது. பொதுவேட்பாளரை அதிமுக பொதுக்குழு கூடி தேர்வு செய்யலாம். இதில் அப்போது நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என உத்தரவிட்டடது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர்களை அறிவித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஓ பன்னீர் செல்வத்துக்கு வெற்றி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆரம்பத்தில் இருந்தே கழகத்தின் ஒற்றுமை அவசியம். இரட்டை இலையை பாதுகாக்க வேண்டும். கட்சியினர் ஒன்றாக செயல்பட வேண்டும். ஒருங்கிணைந்த அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு நான் எந்த வேட்பாளராக இருந்தாலும் ஒப்புதல் அளிக்க தயார் என தெரிவித்து வந்தார். அதனடிப்படையில் அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலையை ஓ பன்னீர் செல்வம் நினைத்தபடி பாதுகாத்துள்ளார். அப்படி தான் இந்த நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்.
இது இடைக்கால உத்தரவு
இந்த வழக்கை பொறுத்தமட்டில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுவுக்காக மட்டும் இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும். அந்த வகையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிகாரம் அளிக்கவில்லை என்பது தான் இந்த தீர்ப்பாக அமைந்துள்ளது. அதேபோல் பொதுக்குழுவால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக நீக்கப்பட்ட 4 பேரின் கருத்துகளையும் இந்த பொதுக்குழுவில் தெரிவிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தர்மம் ஓ பன்னீர் செல்வம் பக்கம் தான் இருக்கிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
எடப்பாடியை ஏற்கவில்லை
இன்றைய நிலையில் அதிமுக என்றால் ஒன்று ஓ பன்னீர் செல்வம். இன்னொன்று எடப்பாடி பழனிச்சாமி. இதில் அதிமுக தரப்பு என்று எதுவும் இல்லை. ஓ பன்னீர் செல்வம் இரட்டை இலை சின்னத்துக்காக கையெழுத்து ஈடுவதாக கூறினார். அதனடிப்படையில் தான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமி கூறி வந்த நிலையில் அந்த அதிகாரத்தை நீதிமன்றம் அளிக்கவில்லை'' என்றார்.