சிஎஸ்கே சார்பில் அதிமுகவுக்கு ரூ.5 கோடி நன்கொடை.. தேர்தல் பத்திரம் தொடர்பான புதிய தகவல் வெளியானது
டெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான புதிய விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. இதில் யார் யார் எந்த கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்துள்ளனர் என்ற விபரம் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் அதிமுகவுக்கு ரூ.5 கோடியை சிஎஸ்கே அணி நிர்வாகம் நன்கொடையாக அளித்துள்ளது தெரியவந்தது.
இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது. குறிப்பிட்ட கட்சிகளுக்கு நன்கொடை வழங்க நினைப்போர் எஸ்பிஐ வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி, அதன்மூலம் நன்கொடையை வழங்கலாம்.

இதில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் விபரம் வெளியே தெரியாது. இந்நிலையில் தான் தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் செல்லாது. இனி தேர்தல் பத்திரம் வழங்கக்கூடாது என உத்தரவிட்டது.
அதுமட்டுமின்றி 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 6ம் தேதிக்குள் வழங்க உத்தரவிட்டதோடு, அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தது. ஆனால் எஸ்பிஐ கால அவகாசம் கோரியது. அதற்கு உச்சநீதிமன்றம் மறுத்தது.
இதையடுத்து கடந்த 12ம் தேதி எஸ்பிஐ சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 13ம் தேதி உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பான விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி 2019 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 11 வரை மொத்தம் 3,346 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் 1,609 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி 15 வரை மொத்தம் 18,871 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதில் 20,421 தேர்தல் பத்திரங்கள் பணமாக்க்பபட்டதாக கூறி அதன் விபரங்களை சீலிட்ட கவரில் வழங்கி இருந்தது.
இதையடுத்து கடந்த 14ம் தேதி எஸ்பிஐ அளித்த விபரங்களை இணையதளத்தில் வெளியிட்டது. இதில் நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நன்கொடை பெற்ற கட்சிகளின் விபரங்கள் தனித்தனியே உள்ளது. தேர்தல் பத்திரத்தின் எண் இல்லாத நிலையில் எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை வழங்கியது என்பது புரியாத புதிராக உள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றம் எஸ்பிஐயின் செயலை கண்டித்தது. மேலும் நாளைக்குள் அதுபற்றி விளக்கம் அளிக்க எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தான் 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் கடந்த மாதம் 15ம் தேதி வரையிலான தேர்தல் பத்திர நன்கொடை விபரங்கள் மட்டுமே கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு முன்பு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் விபரம் வெளியிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தான் வெளியிடப்படாமல் இருந்த 2019 ஏப்ரல் 12ம் தேதிக்கு முந்தைய தேர்தல் பத்திரங்களின் விபரம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி அதிமுகவுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ரூ.5 கோடி நன்கொடை வழங்கி உள்ள விபரம் வெளியாகி உள்ளது. அதாவது 2019 ஏப்ரல் மாதம் 12 மற்றும் 15 என 2 நாட்களில் அதிமுகவின் வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ.6.05 கோடி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக உள்ளது. மொத்தம் 38 தேர்தல் பத்திரங்கள் மூலம் இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 32 தேர்தல் பத்திரங்களை சிஎஸ்கே எனும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வழங்கி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் மட்டும்ரூ.5 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 தேர்தல் பத்திரங்கள் தலா ரூ.1 கோடி மதிப்புடையது. மற்ற 30 தேர்தல் பத்திரங்கள் தலா ரூ.10 லட்சம் மதிப்புடையாகும்.
சிஎஸ்கே நிர்வாகம் தவிர கோவையில் செயல்பட்டு வரும் லட்சுமி மெஷின் வொர்க்ஸ் லிமிடெட் சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரமும், சென்னை அடையாளரை சேர்ந்த கோபால் சீனிவாசன் சார்பில் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான 5 தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications