உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தொடர்ந்து மாஜி தலைமை தேர்தல் கமிஷனர் மீதும் பாஜக நிஷிகாந்த் துபே வன்மம்
டெல்லி: ஆளுநர்கள் வழக்கு, வக்பு சட்டம் வழக்கு விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தை மிக கடுமையாக விமர்சித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தற்போது, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியை, மத அடிப்படையில் மிக மோசமாக இழிவுபடுத்தி விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக எம்பியான நிஷிகாந்த் துபே, கடுமையான சர்ச்சைகளில் சிக்கியவர். நாடாளுமன்றத்தில், தமிழ் மொழியை விட சமஸ்கிருதமே உயர்வானது என பேசி கடும் கண்டனங்களை எதிர்கொண்டவர்.

மேலும் உச்சநீதிமன்றத்தையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் மிகவும் காட்டமாக விமர்சித்து கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறார் நிஷிகாந்த் துபே. தமிழக அரசின் ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு, வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை விமர்சித்த நிஷிகாந்த் துபே, நாட்டின் நடைபெறும் மத யுத்தங்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாதான் பொறுப்பு என குற்றம்சாட்டினார். மேலும் உச்சநீதிமன்றம் எப்படி ஜனாதிபதிக்கு உத்தரவிட முடியும்? சட்ட விவகாரங்களில் உச்சநீதிமன்றம் முடிவெடுத்தால் நாடாளுமன்றத்தை இழுத்து மூடிவிடலாமா? என்றும் அசட்டுத்தனமான கேள்விகளை எழுப்பி கடும் கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறார் நிஷிகாந்த் துபே. இதனால் பாஜக தலைவர் ஜேபி நட்டாவும், நிஷிகாந்த் துபேவின் கருத்துகள் கட்சியின் கருத்துகள் அல்ல என எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
தற்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷியை மத அடிப்படையில் விமர்சித்துள்ளார் நிஷிகாந்த் துபே. வக்பு சட்டம் தொடர்பாக எஸ்.ஒய். குரேஷி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வக்பு சட்டம் மூலம் இஸ்லாமியர் நிலங்களை அபகரிக்க முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்தார் குரேஷி.
இதற்கு பதிலளித்துள்ள நிஷிகாந்த் துபே, நீங்கள் தலைமை தேர்தல் ஆணையராக இல்லை.. முஸ்லிம்களின் கமிஷனராகத்தான் பணியாற்றினீர்கள். உங்களது பதவி காலத்தில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்கதேச ஊடுருவல்காரர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இஸ்லாம் மதம் கிபி 712-ல் தான் இந்தியாவுக்குள் வந்தது. அதற்கு முன்னர் இந்துக்களாக, பழங்குடியினராக, ஜைனர்களாக, பவுத்தர்களாக மட்டுமே இருந்தோம். இந்த நாட்டின் ஒற்றுமை பாகிஸ்தான் பிரிவினை மூலம் சீர்குலைக்கப்பட்டது; ஆகையால் வரலாற்றை படிக்க வேண்டும் என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications