குலாம்நபி ஆசாத்துக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை? ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகிறாரா ப. சிதம்பரம்?
டெல்லி: ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான குலாம்நபி ஆசாத்தின் பதவி காலம் வரும் 15-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், கர்நாடகாவின் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன.
1990-ம் ஆண்டு ராஜ்யசபாவுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் குலாம்நபி ஆசாத். 1996-ம் ஆண்டு சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீரில் இருந்து ராஜ்யசபா எம்பியானார் குலாம்நபி.
1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். இடையில் ஜம்மு காஷ்மீர் முதல்வரானதால் எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்
2009-ல் ஜம்மு காஷ்மீரில் இருந்து மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார் குலாம் நபி ஆசாத். 2014-ம் ஆண்டு ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார் குலாம்நபி ஆசாத்.
காங்.-ல் அதிருப்தி
காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துக்கு மிக நம்பிக்கையானவர் என்கிற பட்டியலில் குலாம்நபி ஆசாத்துக்கு இடம் உண்டு. ஆனால் கட்சி தலைவர் விவகாரம் தொடர்பாக சோனியாவுக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் மேலிடத்தில் அதிருப்திக்கு ஆளானர் குலாம்நபி ஆசாத். ஜம்மு காஷ்மீரின் அத்தனை முதல்வர்கள் மீதும் அடக்கு முறை சட்டங்கள் பாய்ந்தபோது குலாம்நபி ஆசாத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது.
புதிய எதிர்க்கட்சி தலைவர்?
இந்த நிலையில் அவரது ராஜ்யசபா எம்பி பதவி காலமும் முடிவடைகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை அங்கு இல்லை. இதனால் வேறு ஒரு மாநிலத்தில் இருந்துதான் குலாம்நபி ஆசாத் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போதைய நிலையில் கேரளா மாநிலத்தில் இருந்து மட்டுமே குலாம்நபியை தேர்வு செய்ய இயலும். ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதனை செய்யுமா? என்பதும் கேள்விக்குறி.
ப.சிதம்பரத்துக்கு வாய்ப்பு?
இதனிடையே குலாம்நபி ஆசாத் மீண்டும் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படாத நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் யார்? என்கிற விவாதமும் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகாவின் மல்லிகார்ஜூன கார்கே, திக்விஜய்சிங், ஆனந்த் ஷர்மா உள்ளிட்டோர் பெயரும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.