அலர்ட் மோடில் கெஜ்ரிவால்.. ஜெயிலுக்கு போனால் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தக்க வைப்பது எப்படி? தீவிரம்
டெல்லி: அமலாக்கத்துறையால் தாம் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தக்க வைக்க நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். சுரங்க முறைகேடு வழக்கு, ரூ600 கோடி அரசு நிலத்தை விற்பனை செய்தது உள்ளிட்ட பல வழக்குகளில் ஹேமந்த் சோரனை நெருக்கியது அமலாக்கத்துறை. இந்த வழக்குகளில் 14 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

அமலாக்கத்துறை தொடர் சம்மன்: இவ்வழக்கில் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை முன்பாக ஆஜராக உத்தரவிட்டு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஒவ்வொரு சம்மனையும் நிராகரித்த ஹேமந்த் சோரன் ஒரு கட்டத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அப்போதே தாம் கைது செய்யப்படுவோம் என புரிந்து கொண்ட ஹேமந்த் சோரன், மனைவியை முதல்வராக்க திட்டமிட்டார். ஆனால் ஹேமந்த் சோரன் மனைவி முதல்வரானால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை பாஜக எளிதாக உடைத்துவிடும் சூழ்நிலை இருந்தது. இதனால் இந்த முடிவை ஹேமந்த் சோரன் கைவிட்டார்.
ஹேமந்த் சோரன் கைதும் ஜார்க்கண்ட் அரசியலும்: இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்களால் சாம்பாய் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனோ உடனே சாம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனால் சாம்பாய் சோரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை பாஜக வளைக்கும் சூழ்நிலை உருவானது. ஒருவழியாக சாம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார்.
உடைக்கப்படுமா ஆம் ஆத்மி?: ஹேமந்த் சோரனுக்கு எப்படியான நெருக்கடியை அமலாக்கத்துறை கொடுத்ததோ அதே பாணியில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த சம்மன்களை கெஜ்ரிவால் நிராகரித்து வந்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் உருவாகி வருகிறது. இதனால் ஜார்க்கண்ட்டில் கோட்டை விட்டதை டெல்லியில் பிடிக்க அதாவது ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி, பல கோடி ரூபாய் பண பேரத்தை பாஜக தரப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பு: இதனையடுத்து தாம் சிறைக்குப் போவதற்கு முன்னதாக தமது அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதை நிரூபிக்கவும் பாஜகவிடம் எம்.எல்.ஏக்கள் விலை போயிருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும் திடீரென சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். ஹேமந்த் சோரனைப் போல அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் யார் அடுத்த முதல்வர் என்பது தொடர்பான ஆலோசனைகளை ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி மேற்கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கெஜ்ரிவால் தரப்பு முடிவு செய்துள்ளது. டெல்லியில் எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க கெஜ்ரிவால் தரப்பு தீவிரமாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications