உலக நாடுகளில்.. எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துகிறார்கள் தெரியுமா?
டெல்லி: உலகமெங்கும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரிவுபடுத்தியுள்ள நிலையில், இந்தியாவில் தற்போதுதான் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி வழங்கப்படுமென பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
Recommended Video
இந்த நிலையில் இந்தியா தவிர உலகநாடுகள் தங்கள் நாடுகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு எந்த வயதில் இருந்து கொரோனா தடுப்பூசி வழங்குகிறது என்பதை தற்போது பார்க்கலாம். முதலாவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஃபைசர் மற்றும் பயோஎண்டெக் தடுப்பூசிகள் ஐந்து முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல இத்தாலியிலும் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
செக்குடியரசிலும் 5-11 வயதுடைய 7,00,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு முன்கூட்டியே தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. ஹங்கேரி 16 முதல் 18 வயதுடையவர்களுக்கு அந்நாட்டு அரசு மே மாதத்திலேயே தடுப்பூசி போடத் தொடங்கியது. ஜெர்மனி, எஸ்டோனியா, டென்மார்க், கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது. நவம்பர் 28ஆம் தேதி வெளியிட்ட அரசின் தரவுகளின்படி டச்சு நாட்டில் 63% 12 வயது முதல் 17 வயது உடையவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பிரிட்டன், நார்வே ஆகிய நாடுகளில் 12 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது. ரஷியாவில் 12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இஸ்ரேல், ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளன. பக்ரைன் உள்ளிட்ட ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளும் இதே வயதினருக்கு அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜோர்டன், மொராக்கோ, கினியா, நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகின்றன, ஜிம்பாப்வே நாட்டில் 14 வயது சிறுவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு ஊசிகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத தொடக்கத்தில் 15 வயது முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக எகிப்து கூறியுள்ளது.
மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதை சீனா அங்கீகரித்துள்ளது. ஹாங்காங் சினோவாக் தடுப்பூசிகளுக்கான வயது வரம்பை நவம்பர் மாத இறுதியில் 3 ஆகக் குறைத்துள்ள நிலையில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் , மலேசியா ஆகிய நாடுகளில் 5 முதல் 11 வயது வரை தடுப்பூசி வழங்கப்படுகிறது.
ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசியை இந்தோனோசியா அங்கீகரித்துள்ள நிலையில் தென் கொரியா ஆஸ்திரேலியா பிலிப்பைன்ஸ் ஆகியவை 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குகின்றன. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கி வரும் கியூபா தனது நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படுவது நோக்கமாக கொண்டுள்ளது.
இதேபோல சிலி, எல்சால்வடார் ஆகிய நாடுகளில் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குகிறது. கோஸ்டாரிகா ஐந்து வயதுமுதல் உள்ள குழந்தைகளுக்கும், கனடாவில் 11 வயது முதல் 15 வயதிக்கிடையேயான குழந்தைகளுக்கும் பிரேசிலில் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், கொலம்பியாவில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர், ஆஸ்ட்ரோஜனக்கா, மாடர்னா தடுப்பூசிகளை வழங்கும் நிலையில் , அண்டை நாடான ஈக்வடாரில் 6 வயதுடைய குழந்தைகளுக்கு சினோவாக் தடுப்பு ஊசிகள் வழங்கப்படுகிறது.