அக்னிபாத்: வன்முறையில் ஈடுபட்டால்.. போலீஸ் நற்சான்று கிடைக்காது.. விமானப் படை தளபதி வார்னிங்
டெல்லி: பாதுகாப்பு படைகளில் பணிக்கு சேர போலீஸ் நற்சான்று அவசியம். வன்முறை எதற்கும் தீர்வாகாது. இதனால் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடுவது பின்னடைவை தான் ஏற்படுத்தும் என இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி கூறினார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராணுவம், கடற்படை, விமானப்படையில் புதிய ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் பணிக்கு சேரலாம். இவர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம். 4 ஆண்டு பணிக்கு பிறகு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். 25 சதவீதம் பேர் மட்டும் தக்க வைக்கப்படுவர்.

ஓய்வூதியம் கிடையாது
தக்க வைக்கப்படும் வீரர்கள் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். முதலாம் ஆண்டில் மாத சம்பளமாக ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பளத்தில் 30 சதவீத தொகை பங்களிப்பு தொகையாகப் பிடிக்கப்படும். 4 ஆண்டுக்கு பிறகு ராணுவத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

இளைஞர்கள் போராட்டம்
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒப்பந்த பணி போன்று உள்ள இந்த திட்டத்தை கைவிடக்கோரி பீகார், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ரயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதுடன், வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன. ரயில் நிலையங்கள் சூறையாடப்படுகின்றன. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி வருகின்றனர். இன்றும் பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

விமானப்படையில் ஆள்சேர்ப்பு
இருப்பினும் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. ராணுவத்தில் விரைவில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதேநேரத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கான ஆள்சேர்ப்பு நடவடிக்கை ஜூன் 24ல் துவங்கும் என இந்திய விமானப்படையில் தலைமை தளபதியான ஏர் மார்ஷல் விஆர் சவுத்ரி நேற்று கூறினார்.

பின்னடைவை ஏற்படுத்தும்
இந்நிலையில் அவர் அக்னிபாத் திட்டம் மற்றும் போராட்டம் குறித்து இன்று ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது விஆர் சவுத்ரி கூறியதாவது: அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் போராட்ட வன்முறையை கண்டிக்கிறேன். வன்முறை என்பது எதற்கும் தீர்வாக அமையாது; பின்னடைவை தான் ஏற்படுத்தும். பாதுகாப்பு துறையில் சேர விரும்புவோருக்கு போலீசாரின் நற்சான்று அவசியம். வன்முறையில் ஈடுபட்டால் போலீஸ் நற்சான்று கிடைக்காமல் போய்விடும்.

சந்தேகங்களை தீர்க்க வேண்டும்
போராட்டத்தில் உள்ள இளைஞர்கள் தற்போது செய்ய வேண்டியது என்னவெனில் திட்டம் சார்ந்த முழுதகவல்களை பெற்று கொள்வது தான் முக்கியம். அதை தெரிந்து கொண்டால் திட்டத்தின் நன்மை, பலன்களை அறிந்து கொள்வார்கள். இது திட்டத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை போக்கும். திட்ட சந்தேகங்களை அவர்கள் அருகே உள்ள ராணுவம், விமானம், கடற்படையின் தளங்களுக்கு சென்று அறிந்து கொள்ளலாம். ஒரு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே மாற்றங்கள் தேவையா? இல்லையா? என்பது தெரியவரும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தபிறகு அடுத்தக்கட்ட விஷயங்கள் பற்றி முடிவுகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications