அக்னிபாத்.. நாடு முழுக்க கொதிக்கும் இளைஞர்கள்.. 5 முக்கிய சலுகைகளை அறிவித்த அரசு.. என்ன தெரியுமா?
டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள், கலவரங்கள் நடந்து வரும் நிலையில், இந்த திட்டத்தில் சில மாற்றங்களையும், சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை அமைதிப்படுத்தும் விதமாக இந்த மாற்றங்கள் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா என்று நாடு முழுக்க பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.
அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் "அக்னிவீர் " எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளனர். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் மாதம் வழங்கப்படும்.

போராட்டம் ஏன்?
இந்த நிலையில் இளைஞர்கள் பல்வேறு காரணங்களை முன் வைத்து இந்த திட்டத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். 4 வருடம் கழித்து இந்த இளைஞர்கள் என்ன வேலை பார்ப்பார்கள்? அவர்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வி. அதே சமயம் இவர்களுக்கு பென்ஷன் இல்லை. அதனால் 4 வருடம் வேலை பார்த்தும் புண்ணியம் இல்லை. இதில் வருமானம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம். 4 வருடத்திற்கு பின் என்ன வேலை கிடைக்கும் என்று கேள்வியை தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள்.

ரயில்கள்
மத்திய அரசை எதிர்த்து உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஹரியானா, டெல்லி, மேற்கு வங்கம், தெலுங்கானா என்று நாடு முழுக்க பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. முக்கியமாக பீகாரில்தான் அதிக அளவில் போராட்டங்கள் நடக்கின்றன. நாடு முழுக்க 600 ரயில்களுக்கும் மேலாக இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. 60 ரயில் பெட்டிகள் தீ வைக்கப்பட்டு உள்ளன. 30க்கும் அதிகமான ரயில் சேவைகள் தினமும் நிறுத்தப்பட்டு வருகின்றன.

5ம் நாள் போராட்டம்
போராட்டம் இன்று 5ம் நாளை எட்டி உள்ள நிலையில், இந்த திட்டத்தில் சில மாற்றங்களையும், சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை அமைதிப்படுத்தும் விதமாக இந்த மாற்றங்கள் மத்திய அரசு அறிவித்துள்ளது. 1. இதில் வயது வரம்பு 21 வரை இருந்ததை எதிர்த்தும் இளைஞர்கள் நேற்று போராட்டம் செய்தனர். இதையடுத்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு
2. 4 வருட பணிக்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்களில் 10 சதவிகிதம் பேருக்கு கடலோர காவல்படை , மாநில பாதுகாப்பு படைகளில் வேலைவாய்ப்பு ஒதுக்கப்படும். 3. மத்திய ஆயுதப்படையான CAPF, அசாம் ரைபிள் படைப்பிரிவு ஆகியவற்றில் இவறளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். 4. இவர்களுக்காக CAPF, அசாம் ரைபிள் படைப்பிரிவில் 3 வருட வயது நீட்டிப்பு செய்யப்படும். அதாவது 28 வயது வரையிலும் கூட இவர்கள் இந்த இரண்டு பிரிவுகளில் வேலைக்கு சேரலாம். 5. இந்த கடற்படையின் சரக்கு வர்த்தக பிரிவில் இவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்.. உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications