அக்னிவீர் அஜய் குமாருக்கு இழப்பீடு வழங்கவில்லையா? ராகுல் காந்தி வீடியோவுக்கு இந்திய ராணுவம் விளக்கம்
டெல்லி: அக்னிவீர் அஜய் குமார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில் இந்திய ராணுவம் பதில் அளித்துள்ளது.
அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்துக்கு ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை இரவு இந்திய ராணுவம் தெளிவுபடுத்தி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங் அக்னிவீர் குடும்பத்திற்கு ₹ 1 கோடி இழப்பீடு வழங்குவதாக "பொய்" கூறியதாக ராகுல் காந்தியின் விமர்சனத்தையும் இந்திய ராணுவம் மறுத்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீர் திட்டத்தைக் கடுமையாக விமர்சனம் செய்தார். அக்னிவீர் திட்டத்தில் சேருபவர்களை அரசாங்கம் உபயோகப்படுத்திக்கொண்டு தூக்கி எறிகிறது என்றார். மேலும் உயிர்த்தியாகம் செய்த அக்னிவீர் வீரரை 'தியாகி' என்று அழைக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார். அதற்கு பதில் அளித்த ராணுவ அமைச்சகம் 'தியாகி' என்ற சொல் அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இல்லை என்றது.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அக்னிவீர் அஜய்குமார் கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேரா செக்டரில் கண்ணிவெடி வெடிப்பில் இறந்தார். 'இதையடுத்துபணியின் போது வீரமரணம் அடைந்த அக்னிவீர் ஜவான் அஜய் குமாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிதியுதவிக்கான காசோலையை பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஜனவரி மாதம் வழங்கினார் .

இந்த சூழலில் மத்திய அரசு அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வீடியோ வெளியிட்டார். "உண்மையைப் பாதுகாப்பதே நமது அடிப்படை. ஆனால், தியாகி அக்னிவீரர் (அஜய்குமார்) குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட உதவி குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் கூறினார். அக்னிவீர் அஜய் குமார் சிங்கின் தந்தையே அவர்களின் பொய்கள் குறித்து உண்மையை தெளிவுபடுத்தி உள்ளார். எனவே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியிருந்தார்
ராகுல் காந்தி வீடியோ வெளியிட்ட 2 மணி நேரத்தில் இந்திய ராணுவம் பதில் அளித்துள்ளது. தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்திய ராணுவம் கூறுகையில், "கடமையின் போது உயிரிழந்த அக்னிவீர் அஜய் குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதை சமூக ஊடகங்களில் சில பதிவுகளில் காணப்பட்டது. ஆனால் இந்திய ராணுவம் அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறது. அக்னிவீர் அஜய் குமார் செய்தது உன்னத தியாகம்.
அவரது இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டன. மொத்தத் தொகையில், அக்னிவீர் அஜய்யின் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கருணைத் தொகை மற்றும் பிற சலுகைகள் தோராயமாக 67 லட்சம், விதிகளின்படி வழங்கப்பட உள்ளது. அதாவது அக்னிவீர் திட்டத்தின் படி, காவல்துறையின சரிபார்ப்பிற்குப் பிறகு, அக்னிவீர் அஜய் குமாரின் முழுதொகையும் விரைவில் செலுத்தப்படும். மொத்தத் தொகை தோராயமாக ₹ 1.65 கோடி அக்னிவீர் அஜய் குமாருக்கு வழங்கப்படும்" என இந்திய ராணுவம் தெளிவுபடுத்தி உள்ளது.
அக்னிபாத்திட்டம் என்பது கடந்த 2022 அன்று அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும். 17 மற்றும் 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே வேலை தரும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் படி தேர்வு செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேரை அடுத்த 15 ஆண்டுகளுக்கு பணி நீடிக்கப்படும். மற்றவர்கள் 4 வருட வேலை முடிந்ததும் அனுப்பப்படுவார்கள் இதுதான் அக்னிபாத் திட்டம் ஆகும். இதனிடையே மத்திய அரசு அக்னிபாத் வீரர்களின் வேலைக்கான வயது வரம்பை 23 வயதாக நீட்டித்துள்ளது.












Click it and Unblock the Notifications