விவசாயம் மசோதா வேறொன்றுமில்லை... விவசாயிகளுக்கான மரண தண்டனை... ராகுல் காந்தி காட்டம்!!
டெல்லி: விவசாயம் தொடர்பான புதிய சட்டங்கள் வேறொன்றுமில்லை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கும் மரண தண்டனை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி, ''நமது விவசாயிகளுக்கு விவசாய மசோதா என்பது மரண தண்டனை போன்றது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் விவசாயிகளின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகம் இறந்துவிட்டது என்பதற்கு இதுவே சாட்சியாக இருக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

ராஜ்ய சபாவில் மூன்று விவசாயிகள் மசோதாவை நிறைவேற்றும்போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்களது இடத்தில் இருந்து வாக்களிப்பதற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதுகுறித்த கோரிக்கைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வைக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், திமுக எம்பி திருச்சி சிவா இதுகுறித்து கோரிக்கை வைத்து இருப்பது ராஜ்ய சபாவில் பதிவாகி இருக்கும் வீடியோ பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்தும் ராகுல் காந்தி குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாய மசோதாவால் எந்தப் பலனும் விவசாயிகளுக்கு ஏற்படப் போவதில்லை. கார்பரேட்களுக்கு சாதகமாக இந்த மசோதா அமைந்து இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
டெல்லியில் நேற்று காலை இந்தியா கேட் முன்பு டிராக்டர்களுக்கு இளைஞர் காங்கிரசார் தீ வைத்தனர். இதற்கு இன்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் மசோதா மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று மத்திய அரசும், மோடியும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications