ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ஆப்சென்ட்!.. அதிமுக பொதுக் குழு வழக்கு விசாரணை டிச. 12 க்கு ஒத்திவைப்பு
டெல்லி: அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவுகள் மீறபட்டதாக ஓபிஎஸ்ஸும் பொதுக் குழு உறுப்பினர் வைரவனும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17ஆம் தேதி அளித்த தீர்ப்பில் ஜூலை 11 அதிமுக பொதுக் குழு செல்லாது. அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்ததுடன், கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ்ஸும், வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் செய்யப்பட்டன.

அதிமுக தரப்பு
எடப்பாடி பழனிசாமி அதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த நவம்பர் 21 ஆம்தேதி இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்ய பதில் மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கேட்கப்பட்டது.

நவம்பர் 30ஆம் தேதி
இதையடுத்து நவம்பர் 30 ஆம் தேதி இந்த விவகாரம் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றவழக்கு நிலவரப்பட்டியலில் நவம்பர் 30 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 6ஆம் தேதி தோராயமாக பட்டியலிடப்பட்டிருந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன் செவ்வாய்க்கிழமை எதிர்மனுதாரர் எடப்படி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி இதுகுறித்து நீதிபதிகள் அமர்விடம் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணை
மேலும் இந்த வழக்கு விசாரணையை தாமதிக்காத வகையில் டிசம்பர் 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். மற்றொரு மனுதாரரான அதிமுக தலைமை நிலையச் செயலாளர் தரப்பில் வழக்கறிஞர் வினோத் கண்ணாவும் ஆஜராகியிருந்தார். அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வழக்கு விசாரணையை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிபதிகளிடம் கேட்டார். அதற்கு நீதிபதிகள் அமர்வு இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டியது என்பதால் டிசம்பர் 6ஆம் தேதியே விசாரிக்கப்படும் என தெரிவித்தனர். அதன்படி இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடத்தப்பட இருந்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கை ஒத்தி வைக்க கோரினர். இதையடுத்து டிசம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications