ஓபிஎஸ் கதை அம்போ! அதிமுக அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-வெப்சைட்டில் தேர்தல் ஆணையம்!
டெல்லி: அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய தேர்தல் ஆணையம் தமது இணையதளப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறது. இதன்மூலம் அதிமுக இனி எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கும்; அதிமுகவுக்கு உரிமை கோரக் கூடிய ஓ.பன்னீர்செல்வம் முயற்சிகள் பலனளிக்காது என கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டங்கள் கடந்த ஆண்டு ஜூன் 23, ஜூலை 11-ல் நடைபெற்றது. ஜூன் 23-ந் தேதி பொதுக்குழுவில் பங்கேற்ற ஓபிஸ் வெளிநடப்பு செய்தார். ஜூலை 11 பொதுக்குழுவில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிராக பல்வேறு வழக்குகளை ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்தது. இவ்வழக்குகளில் பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டதால் இருதரப்பும் மாறி மாறி அதிமுகவுக்கு உரிமை கோரி வந்தன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி உச்சநீதிமன்றமானது இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதில், அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி ஜூலை 11-ல் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பு அளித்தது. பின்னர் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் அதாவது எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தீர்மானம் செல்லுமா? செல்லாதா? என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமானதாக அமைந்தது. இதனால் அதிமுக, எடப்பாடி பழனிசாமி வசமானது.
தற்போது இதனை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடி பழனிசாமி , அதிமுக பொதுச்செயலாளர் என்பதை தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றி இருக்கிறது. இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இனி அதிமுகவுக்கு உரிமை கோருவதில் அர்த்தம் இல்லை என்கின்றனர். ஓபிஎஸ்- தரப்பின் அதிமுகவுக்கு உரிமை கோருகிற போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications