செங்கோட்டையன் அமித் ஷா உடன் திடீர் சந்திப்பு? ஹரித்வார் போவதாகச் சொல்லிவிட்டு திடீர் ட்விஸ்ட்!
டெல்லி: அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன் என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் அமித் ஷா வீட்டுக்கு அவர் சென்றிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் பறித்தார் ஈபிஎஸ். இந்நிலையில் செங்கோட்டையன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

செங்கோட்டையன் பதவிகள் பறிப்பு
செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாள் கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன். அதுவரை எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார சுற்றுப் பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்தார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி தலைமைக்கு எதிராக பேசியதாகவும், விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் டெல்லி பயணம்
செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மேலும், செங்கோட்டையனுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், செங்கோட்டையன் இன்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து செங்கோட்டையன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்தார்.
ஹரித்வார் செல்கிறேன்
கோவை விமான நிலையம் வந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் கோயிலுக்குச் செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேண்டி கோயிலுக்கு போகிறேன். ராமரை வணங்கிவிட்டு வர வேண்டியதுதான்.
அனைவரும் ஒன்றாக வேண்டும், கட்சி வளர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். நல்லதுக்காக சொல்கிறோம். அதற்கு பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுக்கிறார். முடிவுகள் குறித்து கருத்துகள் சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும். எனது பயணத்தில் பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை, நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை." எனத் தெரிவித்திருந்தார்.
அமித் ஷா உடன் சந்திப்பு
மன அமைதிக்காக ஹரித்வார் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளதாக தகவக் வெளியாகியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளது.












Click it and Unblock the Notifications