அரசு திட்டங்களுக்கு தலைவர்கள் பெயர்.. வழக்கு தொடுத்து வாங்கி கட்டிய சி.வி.சண்முகம்! அனல் பறந்த வாதம்
சென்னை: அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், அதிமுக எம்பி சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த ஜூலை 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உங்களுடன் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.
மகளிர் உரிமைத்தொகை
இத்திட்டத்தின்கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் / சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.
மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திட்டத்தின் விளம்பரங்கள்
இந்த திட்டத்தின் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் மற்றும் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன், "உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது.
உயர்நீதிமன்ற உத்தரவு
மேலும் அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது. எனவே, தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது" என்று உத்தரவிட்டிருந்தது.
உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு சார்பில் வாதம்
திமுக தரப்பில் ஆஜராகியிருந்த மாநிலங்களவை எம்பி வில்சன், "ஏற்கனவே உள்ள அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்தான் இந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிய திட்டம் கிடையாது. ஏற்கனவே இருக்கும் அரசின் பல்வேறு திட்டங்களை கீழ், மக்கள் பலன் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில்தான் இது புதிய அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது" என விளக்கமளிக்கப்பட்டது.
இதனையடுத்து, "முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நீங்கள் கொண்டு வந்த எத்தனை திட்டங்களுக்கு ஒரே ஒரு நபரின் பெயரை வைத்திருக்கிறீர்கள்?" என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிமுக தரப்பு வழக்கறிஞரிடம் நேரடியாக கேள்வி எழுப்பினா். ஒன்று கூட இல்லை என அதிமுக தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்த நிலையில், இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
கவர்னர் படங்கள்
"புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி என அதிமுக கட்சித் தலைவர்களை அவர்கள் அழைக்கும் பெயரில்தான் அரசின் திட்டங்களுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கு ஏராளமான உதாரணங்களை எங்களால் தெரிவிக்க முடியும். மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட அவர்கள் இப்படி சில சமயம் பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள்" என திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
அரசின் விளம்பரங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கிய திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், "இதில் எங்கும் விதிமுறை மீறல் கிடையாது. ஒரு திட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக பிரதமர், முதல்வர் ஆகியோரது பெயர் மற்றும் படங்களை காலம் காலமாக பயன்படுத்தி தான் வருகிறார்கள். கவர்னர் படங்கள் கூட சில சமயம் இடம் பெற்று இருக்கிறது.
அபராதம் விதிப்பு
தற்போது இந்த மனுவை தாக்கல் செய்திருக்கக் கூடிய நபர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். ஆனால், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் 22 அரசு திட்டங்களுக்கு ஒரே நபரின் பெயரை அறிவித்தபோது இவர் மாநில அமைச்சராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது" என வாதிடப்பட்டது.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்ததுடன், அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதற்கு தடை இல்லை என்றும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications