உச்சநீதிமன்றத்தில் அதிமுக கச்சேரி- ஓபிஎஸ் போல பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் அப்பீல்!
டெல்லி: அதிமுகவின் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னையில் ஜூன் 22-ந் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11-ந் தேதி புதிய பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தது.

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்ட பொதுக்குழுவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்; அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டது; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய இந்த ஜூலை 11 பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். மேலும் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே அதிமுகவில் நீடிக்கும் எனவும் தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி , சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த 2-ந் தேதி தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டது. அதாவது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பதை உறுதி செய்தது இந்தத் தீர்ப்பு.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அம்மனுவில், அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தால் தமது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக நிலையில் ஜூலை 11-ந் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தமது மேல்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டி இருந்தார். இப்போது அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினரான வைரமுத்துவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications