அதிமுக இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் நாளை இறுதி விசாரணை- இபிஎஸ், ஓபிஎஸ் ஆஜர்!
டெல்லி: அண்ணா திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நாளை இறுதி விசாரணை நடத்த உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நாளை நேரில் ஆஜராக உள்ளனர்.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பியுள்ளதாக அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகிக்கிறார். அதிமுக பொதுக்குழுவால் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது; அதிமுகவின் தொண்டர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை, எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்தக் கூடாது என அதிமுகவைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல புகழேந்தி, ஓபிஎஸ், ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திலும் புகார் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதித்தது.
இந்த வழக்கில்தான் இந்திய தேர்தல் ஆணையம் நாளை இறுதி விசாரணை நடத்த உள்ளது. டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் இறுதி விசாரணையில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட மனுதாரர்கள் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே இரட்டை இலை சின்னம், உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து அதிமுக, பொது செயலாளர் எடிப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில் கட்சியில் பிளவுகள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே விசாரணையை தொடர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்டக்கது.












Click it and Unblock the Notifications