முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு.. உடல்நிலை எப்படி இருக்கு? எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன் தினம் திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானதும் பல்வேறு தகவல்கள் பரவின.
காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகின. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வல்லுநர் குழு மன்மோகன் சிங்கின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
புகைப்பட போஸ்.. அமைச்சர் மாண்டவியா செயலால் மன்மோகன் சிங் குடும்பத்தினர் கடும் அதிருப்தி
டெங்கு பாதிப்பு
முதலில் மன்மோகன் சிங் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது, அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டெங்கு இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆபத்தில் இல்லை
மன்மோகன் சிங் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடலில் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமருக்குப் பிரபல இதய நோய் வல்லுநர் நிதிஷ் நாயக்கின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
புகைப்பட சர்ச்சை
முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். அமைச்சரின் இந்த செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மன்மோகன் சிங்கின் மனைவி புகைப்படக்காரரை வெளியே செல்லும்படி கூறிய பிறகும், போட்டோ எடுக்கப்பட்டதாகவும் இதனால் அவர் கடும் வருத்தத்தில் உள்ளதாகவும் மன்மோகன் சிங் மகள் தாமன் தீப் சிங் தெரிவித்துள்ளார். மேலும், தனது பெற்றோர் முதியவர்கள் தானே தவிர ஜூவில் உள்ள விலங்குகள் அல்ல என்றும் காட்டமாகச் சாடியிருந்தார்.
மன்மோகன் சிங்
மருத்துவமனைக்கு அழைத்து வரும் முன் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது உடல்நிலையும் பலவீனமான நிலைக்குச் சென்றுள்ளது. அதன் பின்னரே அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 88 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா 2ஆம் அலையின்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அப்போது சுமார் 2 வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்பினார்.