ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்பிழைத்த விமானப்படை கேப்டன்.. யார் இந்த வருண் சிங்?.. முழு விவரம்!
டெல்லி: நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் பயிற்சி மையம் அருகில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு செல்ல முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகள் கோவைக்கு வந்தனர். சூலூரிலிருந்து வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு எம்ஐ ரக விமானத்தில் அவர்கள் சென்றபோதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடியபடி மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். விபத்தில் உடல்கள் முற்றிலும் கருகி அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.
பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த பயங்கர விபத்தில் மொத்தம் 14 பேரில் 13 பேர் உயிரிழந்து விட்ட நிலையில் விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
உயிர்பிழைக்க போராடி வரும் கேப்டன் வருண் சிங் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டத்திற்கு தேர்வாகியிருந்தார். மேலும், கேப்டன் வருண் சிங் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் சௌர்யா சக்கரம் விருது பெற்றார். இலகுரக போர் விமானத்தில் திறம்பட பணியாற்றிய வருண் சிங் 2020-ம் ஆண்டு வானில் அவசர சூழலில் தன்னுடைய தேஜஸ் போர் விமானத்தை காப்பாற்றினார்.
அதாவது வானில் 15,000-க்கும் மேலான அடி உயரத்தில் தேஜஸ் போர் விமானத்தை இயக்கியபோது முழுவதும் கட்டுப்பாட்டை இழந்தது. ஆனால் இந்த மோசமான நிலையை திறம்பட சமாளித்த கேப்டன் வருண் சிங் எந்தவித பிரச்சினையும் இன்றி தேஜஸ் போர் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கினார். இதற்குத்தான் அவருக்கு சௌர்யா சக்கரம் விருது வழங்கப்பட்டது.
நீலகிரி: ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு!