சென்னை விமான இருக்கை மாற்றம்.. தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
டெல்லி: நாடாளுமன்ற நிகழ்வில் கலந்து கொண்ட தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்கு கடந்த பிப்ரவரி 13ம் தேதி இரவு ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அவரது இருக்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தரம் இறக்கப்பட்டு மாற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவரிடம் ஏர் இந்தியா விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
2025 - 2026ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியாக விவாதங்கள் நடைபெறுவது வழக்கம்.எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு என்பது குறித்தும், பட்ஜெட் குறித்த எம்பிக்களின் கேள்விக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிப்பார். உறுப்பினர்கள் தொகுதி தொடர்பாகவும் கேள்விகளை எழுப்ப முடியும். அதற்கும் துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்த பட்ஜெட் தொடர்பான முதற்கட்ட கூட்டத்தொடர் ஜனவர் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 13 வரை நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்த திமுகவைச் சேர்ந்த தென் சென்னை தொகுதி எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா ஏஐ 540 பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார்.

ஆனால் அவர் ஏர் இந்தியா விமானத்தில் உயர் வகுப்பான பிசினஸ் கிளாஸ் (Business class) டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார். அதன்படியே, தமிழச்சி தங்கபாண்டியனின் அந்த டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.. ஆனால், டெல்லியில் இருந்து விமானத்தில் ஏறும்போது, அவருக்கு பிசினஸ் கிளாஸ் இருக்கை ஒதுக்காமல், சாதாரண எகானமி கிளாஸில் (Economy class) டவுன் கிரேட் செய்து இருக்கை ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது.
அதனால், அதிர்ச்சி அடைந்த எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இதுகுறித்து ஏர் இந்தியா அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார் அப்போது, "ஒருசில நேரங்களில் நிர்வாக காரணங்களுக்காக இதுபோல் வேறு கிரேட் கிளாஸ்களுக்கு மாற்றுவது வழக்கம், அதுபோல் மாறிவிட்டது" என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், "எனக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் நீங்கள் எப்படி என்னுடைய வகுப்பை மாற்றலாம்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
பின்னர் சென்னை திரும்பிய தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ' பிப்ரவரி 13ம் தேதி இரவு டெல்லி இருந்து சென்னை செல்வதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் நான் டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி என்னுடைய பிஸினஸ் கிளாஸ் பயண வகுப்பு , எக்கனாமிக் கிளாஸ்க்கு தரம் இறக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு எம்.பி ஆகிய எனக்கே இந்த நிலை என்றால் மற்ற பயணிகளை இவர்கள் எப்படி நடத்துவார்கள் என்று என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை..
பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவைத் தரங்களை இப்படி அலட்சியம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய தவறான நிர்வாகத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நான் வலியுறுத்துகிறேன்' என்று தமிழச்சி தங்கபாண்டியன் குறிப்பிட்டிருந்தார்..
இந்த பதிவுக்குப் பதிலளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், தமிழச்சி தங்கபாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, வருத்தம் தெரிவித்திருக்கிறது. அதோடு, "இது சம்பந்தமாக உங்களிடம் நாங்கள் பேச விரும்புகிறோம். உங்களுக்கு வசதியான நேரத்தில் எங்களுக்கு அதற்கான நேரம் ஒதுக்கிக்கொடுங்கள்" எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

முன்னதாக தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவினை டேக் செய்து அண்ணாமலை விமர்சித்திருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், "'இது நடந்திருக்கக் கூடாது என்றாலும், தரம் தாழ்த்தப்படுவதன் அர்த்தம் என்ன என்பதைத் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்குச் சொல்ல இது சரியான நேரத்தில் வருகிறது. "ஒரு எம்.பி.யை இப்படி நடத்தினால்" என்று கூறியிருப்பது குடும்ப அரசியலின் வம்சாவளியாக வந்த ஒருவரின் மனப்பான்மையை காட்டுகிறது.
விடியல் என்ற வாக்குறுதியுடன், தமிழகம் கடந்த நான்கு ஆண்டுகளில் இருளில் மூழ்கியுள்ளது. இந்த திமுக அரசாங்கத்தின் கீழ் தமிழக மக்களின் நிலைமையை விவரிக்க "தரம் இறக்கப்பட்டது" என்ற வார்த்தை கூட ஒரு மென்மையான வார்த்தையாகத் தெரிகிறது. எனவே கடவுள் கடுமையான உண்மையைத் தெரிவிக்கும் வழியாக இதை நினைத்துப் பாருங்கள் தமிழச்சி தங்கபாண்டியன் அக்கா.' என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications