மியான்மர், பாகிஸ்தானை கதறவிட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் ஹீரோ-தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்
டெல்லி: நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக 3-வது முறையாக அஜித் தோவல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
18-வது லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களும் தற்போது பொறுப்புகளை ஏற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக 3-வது முறையாக அஜித் தோவல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
யார் இந்த அஜித் தோவல்?: 1968-ம் ஆண்டு கேரளா கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அஜித் தோவல். நாட்டின் முதன்மை உளவு மற்றும் வெளிநாட்டு கொள்கை வியூகம் வகுக்கும் அமைப்புகளான ஐபி, ரா ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றினார் அஜித் தோவல். "ரா" உளவாளியாக 7 ஆண்டுகள் பாகிஸ்தானில் அட்டகாசமாக பணியாற்றி அதன் ராணுவ செயல்பாடுகளை அங்குலம் அங்குலமாக உளவு பார்த்தவர் அஜித் தோவல்.
1980களில் தலைதூக்கிய மிசோரம் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை அடியோடு அழித்தொழித்ததில் அஜித் தோவல் பெரும் பங்கு வகித்தவர். பஞ்சாப் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ரகசிய ஆபரேஷன்களை வெற்றிகரமாக நடத்தியவர்.
1970, 1980, 1990களில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட 10-க்கும் மேற்பட்ட விமான கடத்தல் சம்பவங்களை லாவகமாக கையாண்டவர். குறிப்பாக 1999 கந்தகார் விமானக் கடத்தலில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய இந்திய அரசு குழுவுக்கு தலைமை வகித்தவர் அஜித் தோவல்.
பின்னர் இந்திய உளவுத் துறையான ஐபியின் இயக்குநரானார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக மோடி, பிரதமரான போது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித் தோவல். ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இந்திய செவிலியர்கள் சிக்கிக் கொண்ட போது அவர்களை பாதுகாப்பாக மீட்டவர் அஜித் தோவல்.
சர்ஜிகல் ஸ்டிரைக் நாயகன்: 2015-ல் மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்திய நாகா தீவிரவாதிகளை அழிப்பதற்காக மியான்மர் நாட்டு எல்லைக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்களை அழித்த சர்ஜிகல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தியவர். நேபாள பிரதமர் பதவியில் இருந்து இந்தியாவுக்கு எதிராக கேபி ஒலியை கவிழ்த்ததிலும் அஜித் தோவல் முக்கிய பங்கு வகித்தார் என்கிற குற்றச்சாட்டுகள் உண்டு.
2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து நடத்தபட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்கின் நாயகனும் அஜித் தோவல்தான்.
சர்ச்சைகள்: அஜித் தோவல் மகன் சவுரியா தோவல் நடத்தும் இந்தியா பவுண்டேஷன் தொடர்பாக கடுமையான புகார்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்த விவகாரத்திலும் அஜித் தோவல் தலை உருண்டது. இத்தனைகளைக் கடந்தும் தற்போது 3-வது முறையாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியைத் தொடருகிறார் அஜித் தோவல்.












Click it and Unblock the Notifications