ஏக்நாத் ஷிண்டேவை நடுத்தெருவில் நிறுத்தும் பாஜக?அஜித் பவார் முதல்வராகிறாரா? அமித்ஷா சந்திப்பால் பரபர!
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் டெல்லியில் சந்தித்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அஜித் பவார் விரைவில் முதல்வராவார் என மகாராஷ்டிரா அமைச்சர் தர்மராவ்பாபா ஆத்ராம் பகிரங்கமாக கொளுத்தி போட்டிருக்கிறார்.
மகாராஷ்டிராவில் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்தது பாஜக. சிவசேனாவை முதலில் இரண்டாக உடைத்து ஏக்நாத் ஷிண்டே ஆதரவுடன் புதிய ஆட்சி அமைத்தது பாஜக. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி வகிக்கிறார்.

உடைக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ்: இதனைத் தொடர்ந்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸையும் பிளவுபடுத்தியது பாஜக. அஜித் பவார் தலைமையில் 8 எம்.எல்.ஏக்கள் பாஜக-ஏக்நாத் ஷிண்டே சிவசேனா அரசாங்கத்தில் இணைந்தனர். அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது. அன்று முதலே ஏக்நாத் ஷிண்டேவின் முதல்வர் பதவிக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே அஜித் பவார் இருந்து வருகிறார். அஜித் பவார், மகாராஷ்டிரா முதல்வராகும் நாள் வெகுதொலைவில் இல்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
ஆட்சியில் மோதல்: மகாராஷ்டிரா அரசில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ், பாஜக இடம் பெற்றிருப்பதால் எந்த ஒரு நியமனமாக இருந்தாலும் 'மூன்றாக' பங்கிட வேண்டும் என்பது வாதமாக வைக்கப்படுகிறது. இதில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே மோதல்கள் நீடிக்கின்றன. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரமும் பெரும் நெருக்கடியாக உள்ளது.

அமித்ஷா- அஜித் பவார் சந்திப்பு: இந்நிலையில் டெல்லி சென்ற அஜித் பவார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாம் சில நாட்கள் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க போவதில்லை என கூறியிருந்தார் அஜித் பவார். ஆனால் டெல்லி சென்று திடீரென அமித்ஷாவை சந்தித்தார் அஜித் பவார். இந்த சந்திப்புதான் இப்போது மகாராஷ்டிரா அரசியலில் அனலை கிளப்பிவிட்டிருக்கிறது.
ஏக்நாத் ஷிண்டே கதி?: இது குறித்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தர்மராவ்பாபா ஆத்ராம் கூறுகையில், அஜித் பவார் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனை நீண்டகாலமாகவே நான் சொல்லி வருகிறது. நிச்சயம் விரைவில் இது நடக்கத்தான் போகிறது என்றார். இதனால் பாஜகவை நம்பி சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டேவின் கதி என்னவாகும்? என்கிற கேள்வியும் விவாதமும் மகாராஷ்டிரா அரசியலில் நிகழ்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications