உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சகத்தில் இந்திதான்.. ஆங்கிலத்துக்கு தடை- அமித்ஷா பெருமிதம்!
டெல்லி: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா, தமது இரு அமைச்சகங்களிலும் இந்தி மொழியில்தான் அனைத்து கோப்புகளும் இருக்கின்றன. ஆங்கிலத்தில் எந்த ஒரு கோப்பும் இருப்பது இல்லை என பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இந்தி மொழியை கற்றுத்தான் ஆக வேண்டும் எனவும் மத்திய அமைச்சச்ர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் அலுவல் மொழி வைரவிழா கொண்டாட்டங்கள், 4-வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு -பாரதிய ராஜ்பாஷா சம்மேளனம் ஆகியவற்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட 'ராஜ்பாஷா பாரதி' இதழின் வைரவிழா சிறப்பு மலரை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். வைர விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு அஞ்சல் தலையையும் நினைவு நாணயத்தையும் அமித் ஷா வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நமது சுதந்திர இயக்கத்தில் இந்திக்கு பெரும் பங்கு உண்டு. 1857 புரட்சியின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இணைப்பு மொழி இல்லாதது. நமது நாடு ஒரு புவிசார் கலாச்சார நாடு. நமது நாட்டை இணைக்கும் இணைப்பு கலாச்சாரம் இந்தி.
நமது நாட்டின் ஒற்றுமை கலாச்சாரத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நமது கலாச்சாரம் மொழிகளால் பிணைக்கப்பட்டுள்ளது. நமது மொழிகளை நாம் இழந்தால் பெரும் ஆபத்து ஏற்படும்.
புதிய கல்விக் கொள்கை, ஆரம்பக் கல்வி தாய் மொழியில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. டாக்டர் அம்பேத்கர், ராஜகோபாலாச்சாரி, மகாத்மா காந்தியடிகள், சர்தார் வல்லபாய் படேல், கே.எம்.முன்ஷி, லாலா லஜபதி ராய், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆச்சார்யா கிருபளானி என யாராக இருந்தாலும், இந்தியை ஊக்குவித்த நமது தலைவர்களில் பெரும்பாலானோர் இந்தி பேசாத பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு தாய்மொழிகள் இருந்தாலும் இந்தி மொழி நாட்டை ஒன்றிணைக்கும் ஒரு ஊடகம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
நமது மொழிகளை யாராவது காப்பாற்ற முடியும் என்றால் அது தாய்மார்களால்தான் முடியும். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் மட்டுமே பேச வேண்டும். இதைச் செய்தால் நமது மொழிகளுக்கு எதுவும் ஆபத்தை ஏற்படுத்தாது.
நமது மொழிகள் நாட்டிற்கும் உலகிற்கும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து சேவை செய்யும். இனி வரும் காலம் ஆட்சி மொழி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கே உரியது. இனி இந்த நாட்டை எவராலும் எந்த விதமான அடிமைத்தனத்திலும் வைத்திருக்க முடியாது, மொழி என்ற அடிமைத்தனத்தில் வைத்திருக்க முடியாது.
இந்திய மொழிகளின் சொற்களை உள்வாங்குவதன் மூலம் இந்தியை ஒருபோதும் மாசுபடுத்த முடியாது, ஏனெனில் இந்தி தாய் கங்கை போன்றது, எப்போதும் புனிதமாக இருக்கும். பல சொற்கள் இந்தியில் அல்ல, பிற உள்ளூர் மொழிகளில் உள்ளன, அவற்றை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த வார்த்தைகளை இந்தி ஏற்கும் அதே வேளையில், இந்தியின் பல வார்த்தைகளும் நமது உள்ளூர் மொழிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இந்தி ஷப்த் சிந்து அகராதியில் இந்தியாவின் ஒவ்வொரு மொழியின் வார்த்தைகளையும் நாங்கள் சேர்த்துள்ளோம். இந்தியை ஏற்புடையதாகவும், நெகிழ்வானதாகவும், உரையாடலுக்கு உகந்ததாகவும் மாற்ற வேண்டும்.

இன்று இந்தி ஐக்கிய நாடுகள் சபையின் மொழியாக மாறியுள்ளது.10-க்கும் மேற்பட்ட நாடுகளின் இரண்டாவது மொழியாகவும் மாறியுள்ளது. சர்வதேச மொழியாக மாறுவதை நோக்கி இந்தி தற்போது நகர்ந்து வருகிறது. இந்தியாவின் மொழிகளை இந்தி மூலம் வலுப்படுத்த முடியும்.
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சகங்களில் (அமித்ஷா துறைகள்) இந்தியில் மட்டும்தான் அனைத்து கோப்புகளும் எழுதப்படுகின்றன. ஆங்கிலத்தில் எழுதப்படுவது இல்லை. மொழி என்பது உணர்வுப்பூர்வமானது. உபி, மபி, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் மருத்துவ கல்வித்துறையில் இந்தியில்தான் சுற்றறிக்கைகள் அனுப்பப்படுகின்றன.
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் 3 ஆண்டுகளில் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் என்னைப் போன்றவர்களுடன் இந்தியில் உரையாடவும் முடியும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications