பன்னுன் சொன்ன மாதிரியே நடந்திருச்சே.. நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் இன்னொரு கோணம்
டெல்லி: டெல்லி புதிய நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று கூட்டம் நடந்தபோது 2 பேர் திடீரென்று நுழைந்து மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் குண்டுகளை வீசினர். இந்த தாக்குதல் பற்றி டெல்லி போலீஸ் முன்கூட்டியே அலர்ட் செய்த நிலையில் மத்திய அரசு கோட்டை விட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் தாக்குதலுக்கு பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதி குட்பட்வந்த் சிங் பன்னுன் இருக்கிறாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
டெல்லியில் புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது அங்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று லோக்சபா, ராஜ்யசபாக்கள் வழக்கம் போல் கூடின.

இதற்கிடையே தான் லோக்சபா நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்கள் பார்த்தனர். இந்த வேளையில் பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் திடீரென்று லோக்சபா அரங்குக்குள் குதித்தனர். இவர்கள் தவறி விழுந்ததாக முதலில் எம்பிக்கள் நினைத்த நிலையில் அவர்கள் வேகமாக லோக்சபா எம்பிக்கள் அமர்ந்திருக்கும் மேஜையில் ஏறி முன்னோக்கி ஓடினர்.
அதோடு கலர் பாம் வீசப்பட்டது. இதனால் லோக்சபாவில் மஞ்சள் நிற புகை சூழ்ந்தது. இதனால் பயந்துபோன எம்பிக்கள் அங்கிருந்து ஓடினர். இருப்பினும் சில எம்பிக்கள் துணிந்து அந்த நபர்களை பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் டிசம்பர் 13ம் தேதி அல்லது அதற்கு முன்பாக நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி போலீசார் முன்கூட்டியே அலர்ட் செய்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் வசித்து வரும் காலிஸ்தான் பயங்கரவாதியான குட்பட்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை போல் டிசம்பர் 13 அல்லது அதற்கு முன்பாக நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து டெல்லி போலீசார் அலர்ட் ஆகினர். இன்றைய தினம் டெல்லி உள்பட நாடாளுமன்ற வளாகத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் கூட 2 பேர் நாடாளுமன்றத்தில் லோக்சபாவுக்குள் அத்துமீறி நுழைந்து கலர்பாம் போட்டுள்ளனர். இதனால் டெல்லி போலீசார் அலர்ட் செய்தும் கூட மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளில் கோட்டை விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பொதுவாகவே நாடாளுமன்றத்தில் ஒருவர் செல்லும்போது பலகட்ட சோதனைகள் நடத்தப்படும்.
அதுவும் இன்றைய தினம் என்பது 2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலின் 22ம் ஆண்டு நினைவு தினமாகும். இத்தகைய சூழலில் தான் இன்று நாடாளுமன்றத்தில் போடப்பட்டு இருந்த பாதுகாப்பு அரண்களை மீறி 2 பேர் லோக்சபாவுக்குள் நுழைந்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications