கொரோனா எதிரொலி.. தமிழ்நாட்டில் கூடுதலாக இந்த 4 நகரங்களில் நீட் மையங்கள்.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: கொரோனா பரவல் காரணமாகத் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கூடுதலாக நான்கு நகரங்களில் - செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாகப் பல மாதங்களாக நாட்டிலுள்ள பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்குப் பாடங்கள் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து நாடு முழுவதும் +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அப்போது நீட் தேர்வு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

நீட் தேர்வு
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், நீட் தேர்வு வரும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். மேலும், கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்கள் 155இல் இருந்து 198ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டு கூடுதலான மையங்களில் நீட் தேர்வு நடைபெறும் என அவர் தெரிவித்திருந்தார்.

டெல்லியில் அமைச்சர் மா சுப்பிரமணியன்
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தத் தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது நீட் தேர்வு குறித்தும் இதில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்தும் எடுத்துரைத்தாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக 4 நகரங்கள்
மேலும், கொரோனா பரவல் காரணமாகவும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கூடுதலாக 4 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய நகரங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.
|
மொத்தம் 18 நகரங்கள்
இதன் மூலம் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறும் நகரங்கள் 14இல் இருந்து 18ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கடந்த ஜூலை 13ஆம் தேதி முதல் neet.nta.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications