நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது- இருக்கைகளில் சமூக இடைவெளியுடன் அமர்ந்த எம்.பிக்கள்
டெல்லி : நாடாளுமன்றத்தின் 18 நாள் மழைகாலக்கூட்டத்தொடர் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. லோக்சபாவில் எம்.பி.க்கள் தங்களது இருக்கைகளில் சமூக இடைவெளியுடன அமர்ந்திருந்தனர்.
நாடு தழுவிய லாக்டவுன் விதிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், மார்ச் 23 அன்று நாடாளுமன்ற கூட்டம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூட்டப்பட்டுள்ளது.
லோக்சபா, ராஜ்யசபாவில் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளிகள் இருக்குமாறு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வரை 18 நாட்கள் நடைபெறவுள்ளது. முதல் நாளான இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டத்தொடர் நடைபெறும்.
இந்த் தொடரில் மொத்தம் 47 மசோதாக்கள் விவாதங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படும். ராஜ்யசபா கூட்டம் பிற்பகலில் நடைபெறும்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வை கைவிடக் கோரி திமுக, காங்கிரஸ், இடதுசாரி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்றார்.
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங், விசிக எம்.பிக்கள் போராட்டம்
லோக்சபாவில் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக விவாதிக்க கோரி காங். எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கே. சுரேஷ் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும் தமிழக நீட் தேர்வு தற்கொலைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக, சிபிஎம் எம்.பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர்.
டெல்லி வன்முறை வழக்குகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்களது பெயரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.பி. எம்.பி. பிரேமசந்திரன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொண்டுவந்தார். இன்று லோக்சபாவில் மறைந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, ம.பி. ஆளுநர் லால்ஜி டாண்டன், உபி அமைச்சர்கள் கமல் ராணி, சேத்தன் சவுகான், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் உள்ளிட்டோர் மறைக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 1 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.