உருமாறிய வைரஸ் அச்சுறுத்தல்...பிரிட்டன்-இந்தியா விமானங்கள் மீண்டும் இயக்கம்..கெஜ்ரிவால் எதிர்ப்பு!
டெல்லி: உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பால் நிறுத்தபட்டிருந்த இந்தியா- இங்கிலாந்து இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
லண்டனில் இருந்து 256 பயணிகளுடன் முதல் விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தது.
விமானங்கள் மூலம் இந்தியா வரும் பயணிகள் ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகளை அவர்களது சொந்த செலவில் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
உருமாறிய கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் பல நாடுகள் இங்கிலாந்துக்கு இடையேயான போக்குவரத்து உள்ளிட்ட தொடர்புகளை துண்டித்தன.
அதிரடி தடை
இந்தியாவும் இங்கிலாந்தில் இருந்து விமானங்கள் வருவதற்கு கடந்த 23ம் தேதி முதல் தடை விதித்தது. இந்தியா-இங்கிலாந்து இடையே விமான சேவை 6-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
மீண்டும் தொடக்கம்
அதன்படி நேற்று முன்தினம் இந்தியாவின் டெல்லியிலிருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. மேலும் மும்பையில் இருந்தும் ஒரு விமானம் லண்டன் புறப்பட்டது. இந்த நிலையில் இங்கிலாந்து-இந்தியா இடையே விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. லண்டனில் இருந்து 256 பயணிகளுடன் முதல் விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தது.
பரிசோதனை கட்டாயம்
இங்கிலாந்தில் இருந்து விமானங்கள் மூலம் இந்தியா வரும் பயணிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி விமானத்தில் வருபவர்களுக்கு ஆர்.டி. பி.சி.ஆர் சோதனைகள் கட்டாயமாக நடத்தப்படும். இதற்காக நபர் ஒருவருக்கு ரூ.3,400 கட்டணம் வசூலிக்கப்படும்.
தனிமைப்படுத்தப்படுவார்கள்
மேலும் பயணத்திற்கு 72 மணி நேரம் முன்பாக பயணிகள் தங்களது சுய விவர படிவத்தைப் பூர்த்தி செய்து கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை அதிகாரிகளிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விமான நிலையத்தில் பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். இவர்களது கொரோனா பாசிட்டிவ் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை
இந்தியா- இங்கிலாந்து இடையே விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் உள்ளன. இந்தியாவில் நிலவும் கடுமையான கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான விமானங்களுக்கான தடையை மத்திய அரசு ஜனவரி 31 வரை நீட்டிக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.