கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை.. "மன்னிக்கவே முடியாது!" சாட்டையை சுழற்றிய பிரதமர் மோடி
டெல்லி: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும், இந்தச் சம்பவத்தை மேற்கு வங்க அரசு கையாண்ட விதமும் பேசுபொருள் ஆகியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
பிரதமர் மோடி: இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாதவை என்பதை அனைத்து மாநில அரசுகளுக்கும் நான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களைத் தப்பவிடக் கூடாது" என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் என்ற இடத்தில் லக்பதி தீதி சம்மேளனம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சுயஉதவிக் குழு உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தினரின் ஆண்டு வருமானம் ₹ 1 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அவர்கள் "லக்பதி தீதி" என்ற அழைக்கப்படுகிறார்கள். குறைந்தபட்சம் நான்கு விவசாயப் பருவங்களை வைத்து இது கணக்கிடப்படுகிறது,. சராசரி மாத வருமானம் ₹ 10,000க்கு மேல் இருக்க வேண்டும்.
கடும் தண்டனை: இந்த லக்பதி தீதி சம்மேளன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மோடி இந்த கருத்துகளைத் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி சொன்ன இந்த கருத்துகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இதே ஜல்கான் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தனது அரசு பெண்களின் முன்னேற்றம் மற்றும் பெண்களின் நலனுக்காக என்னவெல்லாம் செய்துள்ளது என்பதையும் பட்டியலிட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு அமைந்த அனைத்து அரசுகளை விடக் கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு பெண்களுக்கு அதிக நன்மை செய்து இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், 2014 வரை மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹ 25,000 கோடிக்கும் குறைவான கடன் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் தனது அரசு ₹ 9 லட்சம் கோடியை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
மகாராஷ்டிர தேர்தல்: மேலும், மகாராஷ்டிராவில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், மாநிலத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியைப் பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மகாராஷ்டிரா இந்தியாவின் ஒளிரும் நட்சத்திரம் என்று குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் எதிர்காலம் மிகச் சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications