உஷார்!வலைதளங்களை உற்றுநோக்கும் உளவுத்துறை! அக்னிபாத் போராட்டத்தால் மாநிலங்களுக்கும் பறந்த உத்தரவு
டெல்லி: அக்னிபாத் போராட்டத்தால் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுவததை உளவுத்துறை கண்காணித்து வரும் நிலையில், இதுதொடர்பாக மாநிலங்களுக்கும் மத்திய அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராணுவம், கப்பற்படை, விமானப்படைகளில் குறுகிய கால அதாவது ஆண்டு பணி திட்டமாக அக்னிபாத் திட்டம் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் உள்ள முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலமாக 4 ஆண்டு வரை பணி செய்ய முடியும். அவர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 வரை சம்பளம் வழங்கப்படும். ஓய்வூதியம் கிடையாது.

இளைஞர்கள் போராட்டம்
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கொரோனாவால் ஏற்கனவே வேலையில்லாமல் திண்டாடி வரும் இளைஞர்கள் இத்திட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க தொடங்கின. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தனர். நேற்று முன்தினம் பீகாரில் போராட்டம் வெடித்தது.

ரயில்கள் எரிப்பு
ஜார்கண்ட், தமிழகம், தெலுங்கானா, தமிழகம் என பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக பீகாரில் இளைஞர்கள் உக்கிரமாக போராட்டம் நடத்துகின்றனர். சாலையில் டயர்களை எரித்து எதிர்ப்பை தெரிவிப்பதோடு, ரயில் நிலையங்களில் மறியல் செய்கின்றனர். பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் இறந்தார். 15 பேர் காயமடைந்தனர். இதேபோல் பீகார், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் போராட்டம் வன்முறையானதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.

மாநில அரசுக்கு உத்தரவு
இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் தான் மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்னிபாத் திட்டம் தொடர்பான வதந்திகள் குறித்து எச்சரிக்கை வேண்டும். இதுதொடர்பான வதந்திகளை பரப்பும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சமூக வலைதளங்கள் மீது கண்காணிப்பு செய்ய வேண்டும். மேலும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவததை தடுத்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். அசம்பாவித சம்பவங்களை தடுக்க கூடுதல் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை கண்காணிப்பு
இதற்கிடையே அக்னிபாத் திட்டம் தொடர்பான வதந்தியை பரப்புவோரை தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள உளவுத்துறையினரும் சமூக வலைதளங்களில் தீவிரமாக கண்காணிக்க துவங்கி உள்ளனர். குறிப்பாக வாட்ஸ்அப் செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் திட்டம் தொடர்பாக பாதுகாப்பு துறை தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுதொடர்பாக போலீசார் பயிற்சி மைய உரிமையாளர்களிடம் பேச வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications