முதியோருக்கு கைவிரிப்பு! எம்பிக்களின் பயணத்துக்கு சலுகை காட்டும் ரயில்வே! 5 ஆண்டு செலவு இவ்வளவா?
டெல்லி: முதியவர்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் எம்பிக்கள், மாஜி எம்பிக்களின் பயணத்துக்காக இந்திய ரயில்வே சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட செலவு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் எம்பிக்கள், முன்னாள் எம்பிக்களுக்கு ரயில் பயணம், டிக்கெட்டுகளில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதியவர்களுக்கான கட்டண சலுகை ரத்து, எம்பி, முன்னாள் எம்பிக்களுக்கான ரயில் பயண சலுகைகள் குறித்து சந்திர சேகர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மத்திய அரசிடம் கேள்வி கேட்டு இருந்தார்.

ரூ.62 கோடிக்கும் மேல்
இதற்கு மக்களவை செயலகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்விபரம் வருமாறு: கடந்த ஐந்து ஆண்டுகளில் எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்களுக்கு ரயில்வே பயண சலுகையாக ரூ.62 கோடிக்கும் மேல் மத்திய அரசு செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2021-22ல் ரூ.3.99 கோடி, 2020-21ல் ரூ.2.47 கோடி, 2019-20ல் ரூ.16.4 கோடி, 2018-19ல் ரூ.19.75 கோடி, 2017-18ல் ரூ. 19.34 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

முதியவர்களுக்கு சலுகை ரத்து
இந்தியாவில் 2020 மார்ச்சில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியது. இதனால் லாக்டவுன் அமலானது. இதற்கிடையே தான் ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான வழங்கப்பட்ட கட்டண சலுகைகள் திரும்ப பெறப்பட்டது. அதாவது முதியோருக்கு ரயில் டிக்கெட் கட்டணத்தில் 40 சதவீதமும், மூதாட்டிகளுக்கு 50 சதவீத சலுகை வழங்கப்பட்ட நிலையில் அது திரும்ப பெறப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து எம்பி, மாஜி எம்பிக்களுக்கான சலுகைகள் தொடர்கிறது.

ரூ.3464 கோடி வருமானம்
இதுபற்றி ரயில்வே அளித்த பதிலில், ‛‛2020 மார்ச் 20 முதல் 2022 மார்ச் 31ம் தேதி வரை 7.31 கோடி முதியவர்கள் கட்டண சலுகையின்றி ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்ட 4.46 கோடி ஆண்களும், 58 வயதுக்கு மேற்பட்ட 2.84 கோடி பெண்களும், 8,310 பேர் திருநங்கைகளும் அடங்குவர். இந்த காலக்கட்டத்தில் முதியோருக்கான ரூ.1500 மானியத்துடன் சேர்ந்து ரயில்வேக்கு ரூ.3,464 கோடி வருவாய் கிடைத்துள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

சலுகை வழங்க கோரிக்கை
இதுபற்றி முதியவர்கள் கூறுகையில், ‛‛எங்களுக்கு வழங்கப்பட்ட கட்டண சலுகையை மத்திய அரசு திரும்ப பெற்றது. ஆனால் எம்பி, மாஜி எம்பிக்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம், கேன்டீன் செலவுடன் ரயில் பயண சலுகையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. இது முறையற்றது. இதனால் எங்களுக்கான கட்டண சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும்'' என கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications