மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்: டெல்லி விரைகிறார் பட்னாவிஸ்- அமித்ஷா, ஜேபி நட்டா பரபர ஆலோசனை!
டெல்லி: மகாராஷ்டிரா மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் குழப்பத்தை தொடர்ந்து அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி விரைகிறார். டெல்லி செல்லும் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற சட்ட மேலவை தேர்தலில் பாஜகவுக்கு சிவசேனா எம்.எல்.ஏக்கள், கட்சி மாறி வாக்களித்தனர். மகாராஷ்டிராவில் 10 எம்.எல்.சி இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்டிரா சட்டசபை பலத்தின் அடிப்படையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா 2 இடங்களிலும் பாஜக 4 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். ஆனாலும் பாஜக 5-வதாக ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றியும் பெற்றது. இதற்கு காரணம் சிவசேனா எம்.எல்.ஏக்கள், கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததுதான்.

இந்நிலையில் நேற்று முதல் சிவசேனாவின் மூத்த தலைவர் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 13 எம்.எல்.ஏக்கள் திடீரென தலைமறைவாகினர். சிவசேனா தலைமை மீதான அதிருப்தியால் 13 பேரும் குஜராத் மாநிலம் சூரத் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் மகாராஷ்டிராவின் 26 எம்.எல்.ஏக்கள், குஜராத்தில் தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாஜக மேலும் 11 எம்.எல்.ஏக்களை வளைத்தால் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் என்பதுதான் தற்போதைய நிலை.
இந்த பின்னணியில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அடுத்த கட்ட ஆலோசனைக்காக டெல்லி விரைகிறார். டெல்லி செல்லும் பட்னாவிஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசிக்கிறார். இதனிடையே டெல்லியில் மகாராஷ்டிரா நிலவரம் தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டாவுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இப்பரபரப்புகளுக்கு நடுவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரையும் மும்பைக்கு வர வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அனேகமாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை டெல்லிக்கு மேலிடம் அழைக்கவும் வாய்ப்பிருக்கிறது எனவும் அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications