"இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்கவே முடியாது.. " திடீரென ஆவேசமான அமித் ஷா! என்ன நடந்தது
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்று கூறிய அவர், நாட்டில் தீவிரவாதம் வளர காங்கிரஸ் கட்சியே காரணம் எனச் சாடினார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு விஷயத்தையும் இந்து முஸ்லீம் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கும் என்றும் விமர்சித்தார்.
செவ்வாய்க்கிழமை லோக்சபாவில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடந்து முடிந்தது. தொடர்ந்து இரண்டாவது நாளான புதன்கிழமை ராஜ்யசபாவில் ஆபரேஷன் சிந்துர் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்த அமித் ஷா, இந்துக்கள் ஒருபோதும் தீவிரவாதிகளாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது
ராஜ்யசபாவில் தொடர்ந்து பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "இந்து பயங்கரவாதம் பற்றி யார் பேச ஆரம்பித்தார்கள்? எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் முன்னிலையில் என்னால் பெருமையுடன் சொல்ல முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அரசு கையாண்ட விதத்தைச் சிதம்பரம் விமர்சித்திருந்தார். இதற்குப் பதிலளித்த அமித் ஷா, "சிதம்பரம் நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். மேலும், ஆபரேஷன் சிந்துரையும் கேள்வி எழுப்பினார். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்பதற்கான ஆதாரம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், ஆபரேஷன் சிந்துர் ஒரு தீர்க்கமான நடவடிக்கை என்று கூற முடியாது என்றும் கூறினார்.
யாரை பாதுகாக்கிறார்
அவர் இப்போது இங்கு இல்லை என்றாலும், அவருக்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். அவர் யாரைப் பாதுகாக்க முயல்கிறார்? பாகிஸ்தானா? லஷ்கர்-இ-தொய்பாவா? அல்லது பயங்கரவாதிகளையா? இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டாமா? ஆனால் கடவுளின் அருளால், அவர் கேள்விகளை எழுப்பிய அதே நாளில், மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்" என்றார்.
மேலும் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயங்களுக்காகத் தேசியப் பாதுகாப்பைச் சமரசம் செய்து கொண்டதாக அமித் ஷா குற்றம் சாட்டினார். அமித் ஷா மேலும் கூறுகையில் "காங்கிரசுக்குப் பயங்கரவாதம் பற்றி பாஜகவிடம் கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை. நாட்டில் பயங்கரவாதம் பரவியதற்கு ஒரே காரணம் காங்கிரசின் ஓட்டு வங்கி அரசியல்தான்.
காங்கிரஸ் மீது விமர்சனம்
சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது, 2001 நாடாளுமன்ற தாக்குதலில் குற்றவாளி அப்ஸல் குரு தூக்கிலிடப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிதம்பரத்தின் கருத்துக்கள் வாக்குகளுக்காகப் பாகிஸ்தான், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கும் ஒரு கட்சியின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது" என்றார்.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் மகாதேவ்' என்று பெயரிட்டது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பி பிரித்விராஜ் சவான் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அமித் ஷா, முகலாயர்களுக்கு எதிரான போர்களின்போது சத்ரபதி சிவாஜி "ஹர் ஹர் மகாதேவ்" என்ற முழக்கத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தார்.
இந்து முஸ்லீம் கண்ணோட்டம்
இது குறித்துப் பேசிய அமித் ஷா, "மத்திய அரசு மதத்தின் அடிப்படையில் ஆபரேஷன்களுக்கு பெயரிடுவதாக பிரித்விராஜ் சவான் கூறியிருந்தார். ஆனால் 'ஹர் ஹர் மகாதேவ்' என்பது வெறும் மத முழக்கம் மட்டுமல்ல என்பதைக் காங்கிரஸ் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எல்லாவற்றையும் இந்து முஸ்லீம் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்" என்று அமித் ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications