'வாவ்' ஆனந்த் மகிந்திராவை வியக்க வைத்த பெங்களூர்-மைசூரு எக்ஸ்பிரஸ்வே.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
பெங்களூர்- மைசூர் இடையேயான விரைவுச்சாலையின் உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச தரத்தில் அமைந்து இருப்பதாக பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.
டெல்லி: பெங்களூர்- மைசூர் இடையேயான விரைவுச்சாலையின் உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச தரத்தில் அமைந்து இருப்பதாக பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் வீடியோ பகிர்ந்து பாராட்டியுள்ளார். வந்தேபாரத் ரயில் செல்லும் காட்சிகளும் மேம்பாலத்தில் விரைவுச்சாலையில் வாகனங்கள் செல்லும் காட்சிகள் அடங்கிய ட்ரோன் வீடியோவை ஆனந்த் மகிந்திரா பகிர்ந்து இருக்கிறார்.
பாரத் மாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சாலை கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கும் மேம்படுத்தும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பெங்களூர் - மைசூரு இடையேயான சாலை திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விரைவுச்சாலையாக அமையும் இந்த சாலை வரும் மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச தரத்துடன் விரைவுச்சாலையாக இந்த சாலை அமைகிறது.

வியந்து போன ஆனந்த் மகிந்திரா
உயர்மட்ட மேம்பாலங்கள் என சர்வதேச தரத்தில் அமையும் இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு பெங்களூரில் இருந்து மைசூருக்கு வெறும் 1.5 மணி நேரத்தில் சென்று விடலாம். இதனால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த எக்ஸ்பிரஸ் வே சாலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெங்களூரு - மைசூரு எக்ஸ்பிரஸ் வே சாலையின் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்புகளை பார்த்து வியந்து பதிவிட்டு இருக்கிறார்.

பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலை
ஆனந்த மகிந்திராவை பொறுத்தவரை சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தனக்கு கிடைக்கும் சுவாரசிய தகவல்கள், துணுக்குகள், தன்னம்பிக்கை கதைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவார். ட்விட்டரில் ஆனந்த் மகிந்திராவிற்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர். தான் வியந்து பார்க்கும் பல வீடியோக்களை பதிவிட்டு வரும் ஆனந்த் மகிந்திரா தற்போது பெங்களூர் - மைசூரு விரைவுச்சாலையை டிரோன் மூலமாக எடுக்கப்பட்ட காட்சிகளை பகிர்ந்து பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

விஷூவல் அடையாளம் இதுதான்
ஆனந்த் மகிந்திரா தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- "புதிய பெங்களூர் - மைசூரு சாலையின் கிழே வந்தே பாரத் ரயில் செல்லும் ட்ரோன் காட்சி. சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு இந்தியாவை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கான விஷூவல் அடையாளம் இதுதான்" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நீண்ட காலத்திற்கு பயனளிக்கும்
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இந்த சாலை மூலம் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும். செயல்பாட்டு செலவுகளும் குறையும். தரமான உள்கட்டமைப்பு வசதிகள் பொதுமக்களுக்கும் நாட்டிற்கும் நீண்ட காலத்திற்கு பயனளிக்கும்" பதிவிட்டு இருக்கிறார். மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை - பெங்களூர், பெங்களூர் - மைசூர் எனப் பல நெடுஞ்சாலை பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

ஒன்றரை மணி நேரத்தில்
பெங்களூர் - மைசூர் இடையேயான சாலை பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. கெங்கேரியிலிருந்து மைசூரு செல்வதற்கு தற்போது 3.5 மணி நேரம் ஆகும் நிலையில், இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்த பிறகு வெறும் ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். 8,453 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள இந்த சாலை வரும் மார்ச் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications