பிரதமர் மோடி அப்படி சொல்ல.. எதிராகத் திரும்பிய அண்ணாமலை.. ஆஹா.. பேச்சை கவனிச்சீங்களா?
டெல்லி : வருங்காலத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என பிரதமர் மோடி இன்று பேசிய நிலையில், பிரதமரின் கருத்துக்கு எதிராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் 888 எம்.பிக்கள் அமருவதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் 384 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் நாட்டின் லோக்சபாவில் மொத்தம் 545 எம்.பிக்கள். ராஜ்யசபாவில் மொத்தம் 250 எம்.பிக்கள். லோக்சபா + ராஜ்யசபா என இரண்டு அவை எம்.பிக்களின் எண்ணிக்கையையும் சேர்த்தாலே 795 தான் வரும் நிலையில், லோக்சபாவில் மட்டுமே 888 எம்.பிக்கள் அமர்வதற்கான சீட்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பாஜக எம்.பிக்களை அதிகரிக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தை திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும். அதன் காரணமாகவே கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. எம்.பிக்கள் எண்ணிக்கை உயர்ந்தால் அவர்கள் எங்கே அமர்வார்கள் என்ற கேள்வியை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக மக்கள் தொகை அடிப்படையில் எம்.பிக்கள் பிரதிநிதித்துவம் வரையறுக்கப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை. குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தை தென்னிந்திய மாநிலங்கள் முழு வீச்சில் வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கின்றன. ஆனால் வட இந்திய மாநிலங்களில் இத்திட்டம் பெரிய வெற்றி பெறவில்லை
தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் எம்.பிக்கள் எண்ணிக்கை திருத்தி அமைக்கப்படும்போது தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவம் மிகவும் குறையும் அபாயம் உள்ளது. அதேசமயம், உ.பி, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிக எம்.பிக்கள் உருவாகும் நிலை வரும். இதனால், வட மாநிலங்களில் அதிக இடங்களைப் பிடித்தாலே பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்படும்.
இது தென்னிந்திய மாநிலங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களில் எம்.பிக்களின் பிரதிநிதித்துவம் குறைந்தால், இங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமலேயே மத்தியில் ஒரு கட்சி ஆட்சியை அமைக்க முடியும். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு சவாலாக அமையும் எனக் கூறப்படுகிறது.
வருங்காலத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என பிரதமர் மோடி பேசிய நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தக்கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு எதிராகப் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications