தோல்வி விரக்தி.. இந்தியா கூட்டணியிலிருந்து நழுவும் ஆம் ஆத்மி! சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி
டெல்லி: லோக்சபா தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி தோல்வியடைந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என ஆம் ஆத்மி அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்தன. தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கடும் போட்டி நிலவியது.

இறுதியில் பாஜக தனியாக 240 இடங்களையும் கூட்டணியுடன் 293 தொகுதிகளையும் பெற்றிருக்கிறது. ஆட்சியமைக்க 272 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் அதைவிட கூடுதல் தொகுதிகளை பாஜக பெற்றிருப்பதால், மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். வரும் 9ம் தேதி மாலை 6 மணிக்கு அவர் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்தியா கூட்டணியில் விரிசல்கள் தொடங்கியுள்ளன. இதனை ஆம் ஆத்மி ஆரம்பித்து வைத்திருக்கிறது. டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதியிலும் பாஜகவை எதிர்த்து காங்கிரஸ்+ஆம் ஆத்மி போட்டியிட்டது. ஆனால், 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறவில்லை.
சாந்தனி சவுக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புதுடெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என 7 தொகுதிகளுக்கும் மே 25ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சாந்தனி சவுக், வடகிழக்கு டெல்லி, வடமேற்கு டெல்லியில் காங்கிரசும். கிழக்கு டெல்லி, புதுடெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மியும் போட்டியிட்டது. கடந்த 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அனைத்து தொகுதிகளும் பாஜக வெற்றி வாகை சூடியது.
7 தொகுதிகளிலும் பாஜக 78 ஆயிரத்திலிருந்து 2.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறது. சாந்தனி சவுக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெய்பிரகாஷ் அகவர்வால் 89,325 வாக்குகளிலும், வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் கண்ணையா குமார் 1,38,778 வாக்குகளிலும், கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் 93,663 வாக்குகளிலும், புது டெல்லியில் ஆம் ஆத்மியின் சோம்நாத் பாரதி 78,370 வாக்குகளிலும், வடமேற்கு டெல்லியில் காங்கிரஸின் உதித் ராஜ் 2,90,849 வாக்குகளிலும், மேற்கு டெல்லியில் ஆம் ஆத்மியின் மஹாபல் மிஸ்ரா 1,99,013 வாக்குகளிலும், தெற்கு டெல்லியில் ஆம் ஆத்மியின் சாஹிராம் பெஹல்வான் 1,24,333 வாக்குளிலும் தோல்வியடைந்துள்ளனர்.
கடந்த தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஒரு இடங்களில் கூட வெற்றிப்பெறவில்லை. கடந்த முறை இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிட்டிருந்தன. இப்படியாக தனித்து போட்டியிட்டும், சேர்ந்து போட்டியிட்டும் இரு கட்சிகளும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாதது பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்திருக்கிறது. டெல்லி அமைச்சர் கோபால் ராய் இதனை அறிவித்திருக்கிறார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறும் முதல் கட்சியாக ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது.












Click it and Unblock the Notifications