எதிர்க்கட்சி எம்.பிக்களை உளவு பார்க்க மத்திய அரசு முயற்சியா? ஐபோன் நிறுவனம் கொடுத்த பரபர விளக்கம்
டெல்லி: உங்களின் செல்போன்களை ஹேக்கிங் செய்ய அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் வைத்து இருக்கும் ஆப்பிள் செல்போன்களில் அலர்ட் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக ஐபோன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும்.
இதனால், பெரும்பாலும் ஹேக்கர்களும் ஆப்பிள் போன்களை குறிவைத்தே ஹேக்கிங் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில எம்.பிக்களின் ஆப்பிள் போன்களுக்கு திடீரென ஹேக்கர்கள் டார்கெட் செய்வதாக ஒரு அலர்ட் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், சிவசேனாவின்(உத்தவ் அணி) பிரியங்கா சதுர்வேதி மற்றும் திரிணாமுல் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எம்பிக்கள், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை அலர்ட் வந்துள்ளதாக அது பற்றிய ஸ்கிரீன் ஷாட்டையும் பதிவிட்டுள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் விளக்கம்: அந்த அலர்ட்டில், அரசாங்க ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் உங்கள் செல்போனை ஹேக்கிங் செய்ய முயற்சி நடைபெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எம்.பிக்கள் மட்டுமன்றி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் பணிபுரியும் 3 பேருக்கும் இதேபோன்ற அலர்ட் வந்திருப்பதாக கூறப்படுகிறது. மஹுவா மொய்த்ரா வெளியிட்டு உள்ள ஸ்க்ரீன்ஷாட்டில் [email protected] என்ற ஈ மெயில் முகவரி மூலம் இந்த மெசேஜ் அனுப்பப்பட்டிருப்பது தெரிகிறது.
சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதியும் இதை பகிர்ந்து, "உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு. இது குறித்து விசாரிப்பீர்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக ஐபோன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் கூறியிருப்பதாவது:-
தப்பித்துக்கொள்ள உதவும்: அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வந்த நோட்டிபிகேஷனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. சில எச்சரிக்கை நோட்டிபிகேஷன்கள் தவறானவையாக இருக்க வாய்ப்பு உள்ளது. அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு இருப்பார்கள். எனவே, அதுபோன்ற தாக்குதல்களை அச்சுறுத்தல் சிக்னல்கள் மூலம் கண்டறிவது என்பது அடிக்கடி முழுமையற்றதாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது வந்த நோட்டிபிகேஷனுக்கான காரணம் என்பது குறித்த தகவல்களை வழங்க முடியவில்லை. இவ்வாறு செய்வதன் மூலம், அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களின் போது மாட்டுவதில் இருந்து தப்பித்துக்கொள்ள உதவும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications