அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக தடை இல்லை- உச்சநீதிமன்றம்; சு.சுவாமி வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்!
டெல்லி: தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் தமிழக அரசு அர்ச்சகராக நியமிக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அனைத்து ஜாதியினர் அர்ச்சகராவதை எதிர்த்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த இந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அனைத்து ஜாதியினர் அச்சகராக..
தமிழகத்தில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 29 ஓதுவார்கள் உட்பட 58 நபர்கள் பல்வேறு கோவில்களில் கடந்த ஆண்டு பணியில் அமர்த்தப்பட்டனர். இதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் நேரில் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த தமிழகமும் பெரும் ஆதரவை தெரிவித்து பாராட்டு தெரிவித்தது.

முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
ஆனால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டவர்களால், ஏற்கனவே பணியாற்றிய அர்ச்சகர்கள் நீக்கப்படுகிறார்கள் என வதந்தி கிளப்பிவிடப்பட்டது. அப்போது சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏற்கெனவே பணியில் உள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியில் இருந்து அப்புறப்படுத்தப்படவில்லை. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி நடக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார்.

சு.சுவாமி கொந்தளிப்பு
இந்த விவகாரத்தின் போது சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்து மத விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை முதல்வர் ஸ்டாலி னுக்கு யார் கொடுத்தது? என கொந்தளித்தார். மேலும் பல்வேறு சட்டங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடுவேன் எனவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். அதேநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டசபை விளக்கத்தை ஏற்று அர்ச்சகர் பிரச்சனை முடிந்துவிட்டது எனவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

சு.சுவாமி வழக்கு- தடை விதிக்க மறுப்பு
இந்நிலையில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இத்தகைய நியமனங்களுக்கு தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக நியமிக்கப்படுவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்துள்ள மனு மீது தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.












Click it and Unblock the Notifications