தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? இல்லையா? உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி : தமிழகத்தில் உள்ள நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? இல்லையா ? என்பது தொடர்பாக பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்டவிரோதமாக நிலங்கள் அபகரிப்பு புகார்களை விசாரிக்க நில அபகரிப்பு தடுப்புப் பிரிவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது.
மேலும் இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன.
இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், நில அபகரிப்பு சிறப்புப் பிரிவு மற்றும் நீதிமன்றங்கள் விசாரணை நடத்த தடை இல்லை என உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

விசாரணை
இந்நிலையில், ஈரோடு பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த நிலமோசடி புகார் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வு விசாரித்தது.

செயல்படவில்லை
அந்த வழக்கு விசாரணையின் போது, தனது புகாரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை, நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படாமல் இருப்பதால் பல ஆண்டுகளாக தனக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும்,
மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செயல்படுகிறதா
இதையடுத்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் 36 சிறப்பு நில அபகரிப்பு நீதிமன்றங்கள் கடந்த 2011ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த 2012ல் வைக்கப்பட்ட மனுதாரரின் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதை அறிய முடிகிறது.

பதிலளிக்க உத்தரவு
எனவே, தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறா? இல்லையா ? என கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் விரிவான அறிக்கையை ஆறு வாரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என
உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications