உங்க ராக்கெட்தான் தேவை! இந்தியாவை தேடி ஓடி வந்த அர்மீனியா.. நேரடியாக தலையிடும் டெல்லி! மாஸ் பிளான்!
டெல்லி: அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளுக்கிடையே ஏற்கெனவே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், தற்போது அர்மீனியா இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
அதேபோல கடந்த காலங்களில் அஜர்பைஜான் அரசு, பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்களை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போல இந்த இருநாடுகளும் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடமிருந்தே ஆயுதங்களை கொள்முதல் செய்து வருகின்றன.
அஜர்பைஜான் மற்றும் அர்மீனியாவுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட நிலையில், இந்த ஒப்பந்தத்தை மீறியதாக இருநாடுகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஜாதவ் மரண தண்டனை விவகாரம்.. பாகிஸ்தானிடமிருந்து தீர்ப்பு நகலை கோரும் இந்தியா
அகதிகள்
பல்வேறு நாடுகளில் நடைபெறும் போர் மற்றும் வன்முறை காரணங்களால் உலகம் முழுவதும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டுவரை இந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 8.72% அதிகரித்துள்ளது. மக்களை தொடர்ந்து நாடற்றவர்களாக ஆக்குவதை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐநா தரப்பில் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. ஆனால் மக்களை அகதிகளாக்குவதற்கு முக்கிய காரணமான போரை மட்டும் எந்த நாடுகளும் கைவிடுவதாக தெரியவில்லை.
காரணம்
இந்த வரிசையில் கடந்த 2020ல் இணைந்ததுதான் அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா. இந்த நாடுகளுக்கிடையே ஏற்கெனவே மோதல் போக்கு நீடித்து வந்தது. அதாவது, இவை இரண்டும் முன்னாள் சோவியத் நாடுகள். 1991ல் சோவியத் உடைந்த பிறகு இந்த நாடுகள் தங்களை தனித்தனியாக பிரித்துக்கொண்டன. அஜர்பைஜானில் இஸ்லாமியர்களும், அர்மீனியாவில் கிறித்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்த இரண்டு நாட்டையும் பிரிக்கும் நகோர்னோ-காராபாக் பகுதி யாருக்கு சொந்தம் என்பதுதான் சண்டைக்கான முக்கிய காரணம்.
ஒப்பந்தம்
இந்நிலையில், கடந்த புதன் கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டன. இதனையடுத்து இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க அர்மீனியா சுமார் ரூ.2,000 கோடி மதிப்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் 'பினாகா' வகை ராக்கெட் லாஞ்சர்களை அர்மீனியா பெறும். இந்த வகை ராக்கெட்டுகளை பயன்படுத்தி 90கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும்.
போர் விமானம்
1986ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட்டுகள் தற்போதுவரை இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளன. இவை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. கார்கில் போரிலும் இது பயன்படுத்தப்பட்டது. தற்போது சீன எல்லையில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அஜர்பைஜான் ராணுவம் பாகிஸ்தானிடமிருந்து JF-17 போர் விமானங்களை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதால்தான் தற்போது இவ்வளவு சிறப்பு வாய்ந்த ராக்கெட்டை அர்மீனியா வாங்க முன்வந்துள்ளது.
ஆயுத ஏற்றுமதி
இது மட்டுமல்லாது கடந்த 2017ல் துருக்கி, அஜர்பைஜான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இது அர்மீனியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது எனவேதான் அர்மீனியா இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் ஏற்றுமதி 2021-2022ம் ஆண்டில் சுமார் ரூ.13,000 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
போருக்கு என்ன காரணம் சொன்னாலும் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மக்கள்தான் என ஐநா தொடர்ந்து கூறி வருகிறது என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.