முப்படை தளபதிகளின் குழு தலைவராக (CSC) ராணுவ தளபதி நரவனே பொறுப்பேற்பு!
டெல்லி: முப்படை தளபதிகளின் குழு Chairman of the Chiefs of Staff Committee தற்காலிக தலைவராக ராணுவ தளபதி நரவனே பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதலாவது தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண்சிங் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.
இதனையடுத்து புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நாட்டில் முதல் முறையாக முப்படைகளின் தலைமை தளபதி உருவாக்கப்பட்டு பிபின் ராவத் நியமிக்கப்பட்டிருந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 13வது நாள்: இன்று 2 அவைகளிலும் என்ன நடக்கும்?
அடுத்த தலைமை தளபதி யார்?
முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் புதிய முப்படைகளின் தலைமை தளபதி யார் என்பது இதுவரை தெரியவில்லை. பொதுவாக பாதுகாப்பு படை சார்ந்த நியமனங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசு நியமனம்
ஆனால் முப்படைகளின் தலைமை தளபதி பதவியானது மத்திய அரசால் நியமிக்கப்படுகிறது. இது அரசு சார்ந்த நியமனம் என்பதால் மத்திய அரசின் முடிவே இறுதியானது. இதனால் புதிய முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு தற்போதைய ராணுவ தளபதி நரவனே உள்ளிட்டோர் பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் புதிய முப்படை தளபதிகள் நியமிக்கப்படும் வரை ராணுவம் சார்ந்த விஷயங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
முதல் நடவடிக்கை
இதன் ஒருபகுதியாக, அதாவது புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை தற்காலிகமாக Chairman of the Chiefs of Staff Committee எனப்படும் முப்படை தளபதிகளின் குழுவின் தற்காலிக தலைவராக ராணுவ தளபதி நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கூடுதல் பொறுப்பாக இப்பதவியை நரவனே பொறுப்பேற்றுக் கொண்டார். முப்படைகளின் தலைமை தளபதிதான் Chairman of the Chiefs of Staff Committee-ன் தலைவராகவும் இருந்து வந்தார்.
விரைவில் அறிவிப்பு?
இக்குழுவின் பணிகளில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக ராணுவ தளபதி நரவனேவுக்கு தற்காலிகமாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதிகளில் சீனியர் என்ற அடிப்படையில் நரவனே இப்பொறுப்பை தற்காலிகமாக கவனித்து கொள்வார். விரைவில் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமன அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்பது எதிர்பார்ப்பு.