காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சிக்கிய போலீஸ் அதிகாரிக்கு நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பா? திடுக் தகவல்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி நோக்கி காரில் சென்ற போது தீவிரவாதிகளுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்குக்கு 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்பிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஶ்ரீநகர் விமான நிலைய டி,.எஸ்.பி.யாக பணிபுரிந்தவர் தாவிந்தர் சிங். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நவீது பாபு, ஆசிப் என்கிற 2 ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் காரில் சென்ற போது தாவிதர் சிங் போலீசிடம் சிக்கினார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது பீகார், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இப்படுகொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிதான் நவீது பாபு. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 2 தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங் சிக்கினார்.
தாவிந்தர் சிங் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தேடப்படும் தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு தாவிந்தர் சிங் ஏன் டெல்லி நோக்கி சென்றார்? குடியரசு தினத்தில் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதலிலும் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்குக்கு தொடர்பிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் 2013-ல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, தாவிந்தர் சிங் பற்றி தமது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மகாராஷ்டிராவை. 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். மோகன் வைத்யா மீண்டும் வலியுறுத்தல்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகமதுவை டெல்லிக்கு அழைத்து வைத்து தங்க வைக்க ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங் தம்மை ஏற்பாடு செய்தார் என்பது அப்சல்குருவின் வாக்குமூலம். தமது வழக்கறிஞர் சுஷில்குமாருக்கு கைப்பட எழுதிய கடிதத்தில் அப்சல் குரு Dravinder Singh என குறிப்பிட்டிருப்பது தற்போது சிக்கிய தாவிந்தர் சிங்கைத்தான் என தெரியவந்துள்ளது.
ஆனால் தாவிந்தர் சிங் குறித்து அப்போது எந்த விசாரணையுமே நடத்தப்படவில்லை. இந்நிலையில்தான் மீண்டும் ஹிஸ்புல் தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு டெல்லி வரும் வழியில் வசமாக சிக்கியிருக்கிறார் தாவிந்தர் சிங். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.