மோடியின் அடுத்த டார்கெட்! ஆர்டிகிள் 370 நீக்கம், முத்தலாக் தடை, அயோத்தி ராமர் கோவில்.. குறி இதுதானா?
டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடை, அயோத்தி ராமர் கோவிலை தொடர்ந்து, பிரதமர் மோடியின் அடுத்த டார்கெட், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் என்கிறார்கள் பாஜகவினர்.
2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி, இந்திய நாட்டின் பிரதமர் பதவியில் அமர்ந்தது முதல் அதிரடியாகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு மீண்டும் அசுர பலத்தோடு பாஜக ஆட்சியில் அமர்ந்த நிலையில், பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, சில சட்டங்களை அதிரடியாக நிறைவேற்றி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியான விஷயங்களாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடை சட்டம், 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் ஆகியவற்றைச் சொல்லலாம்.

இந்த வரிசையில் புதிதாக அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு வெற்றிகரமாக திறக்கப்பட்டதையும் சேர்த்துக் கொள்ளலாம். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இன்று மிகப் பிரமாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றறது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முன்னணி அரசியல் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
அயோத்தி ராமர் கோவில் திறப்புக்குப் பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு இன்று ராமர் வந்துவிட்டார். கூடாரத்தில் இருந்த பால ராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க தருணம் மட்டுமல்ல புதிய சகாப்தத்தின் துவக்கம். 1,000 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த நாளை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.” என பெருமிதத்தோடு பேசினார்.
ராமர் நம்மை மன்னிப்பார்.. இந்தியாவில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது: அயோத்தியில் பிரதமர் மோடி பேச்சு
முத்தலாக் தடைச் சட்டம், 370வது சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது ஆகியவற்றை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு. பாஜகவின் நீண்டகால முயற்சிகளில் அக்கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் அடுத்த டார்கெட், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதுதான் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவது, சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு போன்ற பாஜகவின் நீண்டகால தேர்தல் வாக்குறுதிகளை 2014 முதல் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. பாஜக அரசின் அடுத்த சாதனை, பாகிஸ்தானிடமிருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு, உலக அரங்கில் இந்திய நாட்டின் பலத்தை நிரூபிப்பதுதான் என பேசத் தொடங்கி உள்ளனர் பாஜகவினர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் நம் நாட்டின் பகுதிதான். 2026ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் வெற்றி கொள்வோம் என கடந்த டிசம்பர் மாதம் கூட மக்களவையில் முழங்கினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அப்போது அது பெரும் விவாதத்திற்கு உள்ளானது. அயோத்தி கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கையோடு, இனி பாஜக அரசின் கவனம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பக்கம் தான் திரும்பும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications