'என்ன நடக்குது இங்க?'.. நேரலையில் பொங்கிய மோடி.. 'மன்னிப்பு' கேட்ட கெஜ்ரிவால் - என்ன நடந்தது?
டெல்லி: பிரதமர் - முதல்வர்கள் இடையேயான தனிப்பட்ட மீட்டிங்கை ஒளிபரப்பு செய்ததற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலை வீசிக் கொண்டிருக்கும் சூழலில், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக திண்டாடி வருகின்றன.
இதனால் பலர் உயிரிழக்க, 'திருடி, பிச்சை எடுத்தாவது ஆக்சிஜன் கொண்டுச் சேருங்கள்' என்று உச்சநீதிமன்றமும் மத்திய அரசை சாடியுள்ளது.

யாரிடம் சொல்வது?
இந்த நிலையில், கொரோனா அதிகம் பாதித்துள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வர வேண்டிய ஆக்ஸிஜன் டேங்கர், வேறொரு மாநிலத்தில் தடுக்கப்பட்டால் மத்திய அரசில் யாரிடம் பேச வேண்டும் என்பதை தயவுசெய்து கூறுங்கள்" என அவர் கேள்வியெழுப்பினார்.

இராணுவ பாதுகாப்புடன்
தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், "நாட்டில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளையும் இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். டெல்லிக்கு ஆக்ஸிஜன் ஏற்றிவந்த வாகனங்களை பல மாநிலங்கள் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் தீர்வு காண வேண்டும். இராணுவ பாதுகாப்புடன் டெல்லியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்க வேண்டும்" எனவும் அவர் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

நேரலையில் மோடி டென்ஷன்
பிரதமரும், முதல்வர்களும் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தை டெல்லி அரசு ஒளிபரப்பு செய்தது. இது தெரியாமல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்க, ஒருகட்டத்தில் ஒளிபரப்பை கண்டறிந்த மத்திய அரசு அதிகாரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை அறிந்த பிரதமர் மோடி, "என்ன நடக்கிறது... இது நமது பழக்கத்திற்கும், நெறிமுறைகளுக்கு எதிரானது. இங்கு நடப்பதை யாரோ ஒரு முதல்வர் நேரடி ஒளிபரப்பு செய்கிறார். இது சரியான செயல்பாடு அல்ல. நாம் எப்போதும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று சற்று காட்டமாக தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்கிறேன்
இதற்கு பதிலளித்த முதல்வர் கெஜ்ரிவால், "ஓகே சார். எதிர்காலத்தில் நாங்கள் கவனமுடன் இருக்கிறோம்" என்றார். "என் தரப்பில் ஏதேனும் தவறு நடந்தால், நான் கடுமையாக ஏதேனும் சொல்லியிருந்தால், அல்லது எனது நடத்தையில் ஏதேனும் தவறு இருந்தால், நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம்" என்று கெஜ்ரிவால் கூறினார்.

இருந்தாலும் வருந்துகிறோம்
இதன்பிறகு டெல்லி முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "இன்று முதல்வர் பிரதமரின் ஆலோசனை நேரலையில் பகிரப்பட்டது, ஏனெனில், இதனை பகிரக் கூடாது என்று மத்திய அரசிடமிருந்து எந்தவொரு அறிவுறுத்தலும், எழுதப்பட்ட அல்லது வாய்மொழி உத்தரவும் வரவில்லை. இருப்பினும், இதனால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications