"இட ஒதுக்கீடு ரத்து.." இணையத்தில் பரவும் அமித் ஷாவின் போலி வீடியோ.. டெல்லி போலீசார் வழக்குப்பதிவு
டெல்லி: இடஒதுக்கீடு தொடர்பாக அமித் ஷா பேசுவது போன்ற போலி வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக இந்த முறை தேர்தல் நடக்கிறது. இதுவரை இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் வாரங்களில் மீதமுள்ள 5 கட்ட வாக்குப்பதிவு நடக்கயிருக்கிறது.

இதன் காரணமாக நாடு முழுக்க பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வருகிறது. அதேநேரம் மறுபுறம் பல போலி செய்திகளும் வீடியோக்களும் கூட வேகமாக பரவி வருகிறது.
அமித் ஷா: அதேபோல தான் பட்டியல் சாதிகள் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது போன்ற போலி வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த போலி வீடியோ தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அமித் ஷாவின் இந்த வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பிய நலையில், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் உள்துறை அமைச்சகம் புகார் அளித்தது. அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் அமிஷ் ஷா பேசிய வீடியோவை திரித்து இந்த வீடியோவை சிலர் வெளியிட்டுள்ளதாக பாஜக சாடியுள்ளது. இதையடுத்து டெல்லி போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் பிளான்: இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா கூறுகையில், "தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் அமித் ஷா கூறிய கருத்து தவறாக திரித்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியினர் தான் இந்த எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் போலியானது.. இந்த வீடியோ சமூகத்தில் பெரிய அளவிலான வன்முறையை ஏற்படுத்தும் ஆபத்தும் இருக்கிறது.
நடவடிக்கை: தெலுங்கானாவில் எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை குறைத்து, மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளனர். இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதால் அந்த இடஒதுக்கீட்டை நீக்குவது குறித்து தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். ஆனால், அதை திரித்துள்ளனர். இந்த போலி வீடியோவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் பலர் பகிர்ந்துள்ளனர்.. அவர்கள் சட்டத்திற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்" என்றார்.
காங்கிரஸ் கட்சியின் சில அதிகாரபூர்வ கணக்குகள் உட்பட பல கணக்குகள் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளன. "SC/ST இடஒதுக்கீடு ஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் திட்டம்" என்று சொல்லி அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இது இணையத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
பாஜக சாடல்: இந்தச் சூழலில் தான் பல பாஜக தலைவர்கள் அந்த வீடியோவை கடுமையாக எதிர்த்துள்ளனர். காங்கிரஸ் தான் இந்த வீடியோவை பரப்பி வருவதாகவும் இது சமூகத்தில் மிக பெரிய மோதலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் பாஜக சாடி வருகிறது.
உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக புகார் அளித்துள்ள நிலையில், அத்துடன் விரிவான அறிக்கையை ஒன்றையும் சமர்பித்துள்ளது. அதில் அமித் ஷாவின் இந்த போலி வீடியோவை பகிர்ந்த கணக்குகள் மற்றும் லிங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இப்போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications