ஞானவாபி மசூதி ஆய்வு அறிக்கை.. மேலும் 3 வாரங்கள் அவகாசம் கோரும் தொல்லியல் துறை! பரபரக்கும் வாரணாசி
டெல்லி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு இன்று வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்து தொல்லியல் துறை புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.. இது அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு தரப்பினர் அங்கிருந்து விஷேஷ்வர் கோயிலை இடித்தே இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக கூறுகின்றனர். இது குறித்து வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.
வாரணாசி நீதிமன்றம்: கோவிலின் மேற்குச் சுவருக்குப் பின்னால் உள்ள சிருங்கர் கௌரி கோவிலில் பிரார்த்தனை செய்ய அனுமதி கோரிய நான்கு பெண்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த விவகாரத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடந்த வாரணாசி நீதிமன்றம் கடந்த ஜூலை 21ஆம் தேதி உத்தரவிட்டது. வளாகத்தை வீடியோ ஆய்வு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வை நடத்தியது. இருப்பினும், தொல்லியல் துறை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்வதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வருகிறது. இன்றுடன் அதற்கான காலக்கெடு நிறைவடைந்தது. இதற்கிடையே தொல்லியல் துறை சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அறிக்கையைச் சமர்ப்பிக்க மேலும் 3 வாரங்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
தொல்லியல் துறை: இந்த ஆய்வு பல நாட்கள் நடத்தப்பட்ட நிலையில், தொல்லியல் துறை பல முறை காலஅவகாசம் கோரியிருந்தது. ஒரு வழியாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்த ஆய்வு முடிவடைந்தது. இருப்பினும், அப்போதும் அறிக்கையை தாக்கல் செய்யாத தொல்லியல் துறை அதற்கு கூடுதல் அவகாசம் கோரியது. கடந்த நவம்பர் 18ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது தொல்லியல் துறை மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டது. இருப்பினும், நீதிமன்றம் 10 நாட்கள் மட்டுமே அவகாசம் அளித்தது.
மசூதி வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட வுசுகானா பகுதியில் மட்டும் தொல்லியல் துறை ஆய்வை நடத்தவில்லை. கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஆய்வு பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாகவும் அறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே அவகாசம் கோருவதாகவும் தொல்லியல் துறை நீதிமன்றத்தில் கூறியிருந்தது.
இதற்கிடையே இன்றைய தினம் ஞானவாபி மசூதியில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க மேலும் 3 வாரங்கள் அவகாசம் கேட்டு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தொல்லியல் துறை மனுத் தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications